மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஜாகி உர் ரஹ்மானுக்கு 15 ஆண்டுகள் சிறை
இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட ஜாகி உர் ரஹ்மானுக்கு பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது,
கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கடல் வழியே மும்பை நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதனால் மும்பை நகரமே போர்க்களமானது. இத்தாக்குதலில் பல காவலர்கள் உட்பட 166 பேர் உயிரிழந்தனர்.
இத்தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பின்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு புனேவில் அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டார்.
மூளையாகச் செயல்பட்டவர்
இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைமை ராணுவ தளபதி ஜாகி உர் ரகுமான் லக்வி. மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் இவர் முன்னரே கைது கைது செய்யப்பட்டிருந்தாலும், கடந்த 2015ஆம் ஆண்டிலேயே இந்த வழக்கில் அவர் ஜாமீன் பெற்றார்.
மீண்டும் கைது
இந்நிலையில், பல்வேறு நாடுகளில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்குத் தொடர்ந்து நிதியுதவி செய்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு ஜாகி உர் ரகுமான் பாகிஸ்தானில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கும் அந்நாட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
15 ஆண்டுகள் சிறை
இவ்வழக்கில் 61 வயதாகும் ஜாகி உர் ரகுமான் லக்விக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவருக்குப் பாகிஸ்தான் ரூபாய் 30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தைச் செலுத்தத் தவறும்பட்சத்தில் கூடுதலாக 1.5 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு
இவர் பல ஆண்டுகளாகவே பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும் சர்வதேச அழுத்தம் அதிகரித்தாலேயே பாகிஸ்தான் அரசு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. சர்வதேச அளவில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி செல்வதைத் தடுக்க ஜி-7 நாடுகளால் சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு (FATF) உருவாக்கப்பட்டுள்ளது.
திடீர் நடவடிக்கை ஏன்
பயங்கரவாதிகளுக்குச் செல்லும் நிதியைப் பாகிஸ்தான் தடுக்கத் தவறியதாகக் குற்றஞ்சாட்டி, கடந்த 2019ஆம் ஆண்டு அந்நாட்டை 'க்ரே' (Grey) பட்டியலில், சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு சேர்த்தது. மேலும், பயங்கரவாதிகளுக்குப் பணம் செல்வதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் பாகிஸ்தான் தடை செய்யப்பட்ட நாடுகள் பட்டியலில் (கறுப்புப் பட்டியல்) சேர்க்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்தே பாகிஸ்தான் ஜாகி உர் ரகுமான் லக்வி கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.