துப்பாக்கிச் சூடு- தடுக்க என்ன நடவடிக்கை? யு.எஸ்-ல் சுட்டுக் கொல்லப்பட்ட என்ஜினியர் மனைவி கேள்வி
அமெரிக்காவில் குற்றங்களை தடுக்க இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அந்நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய என்ஜினியரின் மனைவி கேள்வி எழுப்பியுள்ளார்.
வாஷிங்டன்: அமெரிக்காவில் குற்றங்களை தடுக்க இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய என்ஜினியரின் மனைவி சுனையனா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா, அமெரிக்காவில் உள்ள கார்மின் நகரில் விமான போக்குவரத்து என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது நண்பர் அலோக் மடசனி என்பவருடன் கன்சாஸ் நகரில் உள்ள பாருக்கு கடந்த 22ம் தேதி சென்றுள்ளார்.
அப்போது அங்கே வந்த மர்ம நபர் ஒருவர் எங்கள் நாட்டை விட்டு வெளியேறு என்று கூறியப்படி துப்பாக்கியால் சுட்டதில் ஸ்ரீனிவாச குச்சிபோட்லா மற்றும் அவரது நண்பர் அலோக் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் சேர்க்ப்பட்டனர். இதில் ஸ்ரீனிவாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் கொலையாளியை போலீசார் கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லாவின் மனைவி சுனையனா துமலா அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது :
இன்னும் 2 வாரத்தில் எனது கணவருக்கு 33 வயது எட்ட உள்ளது. ஆனால் அவருடைய மரணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நாள்தோறும் செய்தித்தாள்களைப் படித்து அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்து வருவதைக் குறித்து அவரிடம் நான் எப்போது கேட்டாலும் நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும் என்று என்னிடம் தெரிவிப்பார். நான் வேறு நாட்டுக்கு செல்ல விருப்பம் உள்ளதாக அவரிடம் தெரிவித்தாலும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து அமெரிக்காவில் வசிப்பதையே விரும்பினார்.
அவர் என்னை விட்டு மறைந்தாலும் என் அருகில் தான் உள்ளார் . எப்போதும் அவர் யாருக்கும் எந்த தீங்கும் செய்ததில்லை. அவருடைய இழப்பு எங்கள் குடும்பத்தில் ஈடுசெய்யமுடியாதது.
அமெரிக்காவில் குற்றங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும், இதற்கு எங்களுக்கு பதில் வேண்டும். இது எனக்கான கேள்வி இல்லை. அனைத்து தரப்பு மக்களின் சார்பாக கேட்கிறேன்.
இவ்வாறு சுனையனா கூறினார்.
முன்னதாக ஸ்ரீனிவாச குச்சிபோட்லா குடும்பத்திற்கு உதவும் வகையில், 13 மணி நேரத்தில் ஆன்லைன் மூலம் 17 கோடி நிதி திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.