4 முக்கிய வழக்குகளில் ஜாமீன்: 6 மாத வீட்டு சிறையில் இருந்து விடுதலையானார் முஷரப்
இஸ்லாமாபாத்: கிட்டத்தட்ட ஆறு மாத காலமாக வீட்டுச் சிறையில் வாழ்ந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்பிற்கு, அவர் மீது தொடரப்பட்ட நான்கு முக்கிய வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து வீட்டுச் சிறையிலிருந்து விடுதலை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2007-ம் ஆண்டு, பர்வேஷ் முஷரப்ஆட்சியில் இருந்தபோது அவசரநிலையை அமல்படுத்தி 60 நீதிபதிகளை அதிரடியாக பதவி நீக்கம் செய்தார். இது தொடர்பான வழக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே இடைக்கால ஜாமீன் பெற்றிருந்த முஷரப் அதனை மேலும் நீட்டிப்பதற்காக உயர் நீதிமன்றத்துக்கு சென்றார்.
அங்கு அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப் பட்ட நிலையில், முஷரப்பை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார் நீதிபதி. ஆனால், போலீஸார் கைது செய்வதற்கு முன்னதாகக் காரில் ஏறி தப்பித்தார் முஷரப்.
நீதிமன்றத்தில் இருந்து தப்பிய முஷரப் இஸ்லாமாபாத் புறநகர்ப் பகுதியான சக்ஷாஜத் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டுக்குச் சென்றார். அவரை கைது செய்வதற்காக அங்கு சென்ற போலீசார் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி காலை முஷரப்பைக் கைது செய்தனர். சக்ஷாஜத் நகரில் உள்ள முஷரப்பின் பண்ணை வீடு கிளைச் சிறையாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு, பலூசிஸ்தான் தலைவர் அக்பர் பக்தி கொலை வழக்கு ஆகியவற்றில் முஷரப்புக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தற்போது, லால் மசூதி மதகுரு அப்துல் ரஷித் காஜி கொலை வழக்கிலும் அவரை ஜாமினில் விடுதலை செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து தனது 6 மாத வீட்டு சிறை காவலில் இருந்து முஷரப் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தகவல் அறிந்த ஆல் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தொண்டர்கள் தங்கள் மகிழ்ச்சியை இனிப்பு வழங்கி கொண்டாடினர். விரைவில் செய்தியாளர்களை முஷரப் சந்திப்பார் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, முஷரப்பின் பண்ணை வீடு கிளைச் சிறை என அறிவிக்கப் பட்டிருந்த உத்தரவும் திரும்பப் பெற இருக்கிறது. எனினும், முஷரப் வீட்டை கடந்த 6 மாதங்களாக காவல் காத்து வந்த சிறை துறை போலீசார் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை. அதேபோல், பாகிஸ்தானை விட்டு முஷரப் வெளியேற உள்துறை அமைச்சகம் விதித்திருந்த தடையும் நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.