முஷாரப்புக்கு ஜாமீன் கிடைத்தது: வெளிநாடு பறக்கவும் கோர்ட் அனுமதி
இஸ்லாமாபாத்: இதுவரை வீட்டுக்காவலில் இருந்த முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதாகவும், இனி, அவர் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாகவும் அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, ராவல்பிண்டி பிரச்சாரக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பதவி இழந்தார் பாகிஸ்தான் அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரப்.
அதன் பின்னர் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற முஷாரப், சில ஆண்டுகள் அங்கு தலைமறைவாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு நாடு திரும்பிய முஷாரப் கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் பாதுகாப்பு கருதி, அவர் வீட்டு காவலில் அடைக்கப்பட்டார். அவரது வீட்டிலேயே சிறைத்துறை அதிகாரிகள் அவருக்கு காவல் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று கீழ்நிலை நீதிமன்றம் பர்வேஷ் முஷாரப் வெளிநாடு சென்று வர அனுமதி அளித்திருப்பதாக அவரது வக்கீல் தெரிவித்துள்ளார். அதிகாரப்பூர்வமான உத்தரவு கிடைக்கப் பெற்றவுடன் முஷாரப் வெளிநாடு செல்வார் எனத் தெரிகிறது.
கோர்ட் உத்தரவு முறைப்படி வழங்கப்பட்டவுடன் அவரது வீட்டில் இருக்கும் ஜெயில் துறை அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறவுள்ளனர். இதையடுத்து நாளை முஷாரப் துபாய் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.