கார்கில் போர் திட்டம் பற்றி கயானிக்குக் கூட சொல்லாத முஷாரப்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை அப்போது பொறுப்பில் வைத்திருந்த ராணுவ தளபதி அஷ்பாக் பர்வேஸ் கயானிக்குக் கூட கார்கில் நடவடிக்கை குறித்த விவரத்தைத் தெரிவிக்காமல் இருட்டடிப்பு செய்தார் முன்னாள் ராணுவத் தலைமைத் தளதியும், சர்வாதிகாரியுமான பர்வேஸ் முஷாரப் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அப்துல் மஜீத் மாலிக் என்ற முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் தனது 'Ham Bhi Wahan Mojod Thay' என்ற நூலில் கூறியுள்ளார்.
கார்கில் போர் நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தபோது நடந்தது. அப்போது ராணுவத் தலைமைத் தளதியாக இருந்தவர் பர்வேஸ் முஷாரப். அவருக்குக் கீழ் இருந்தவர் கயானி.
முஷாரப் காலத்தில் இவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரின் பாதுகாப்புப் பணியில் இருந்தவர். ஆனால் 1999ல் கார்கில் போர் நடைபெற்ற போது கயானியை ஒதுக்கி வைத்திருந்தார் முஷாரப் என்று அப்துல் மஜீத் மாலிக் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தனது நூலில், கயானி 12வது பிரிவுக்குத் தலைமை அதிகாரியாக அப்போது இருந்தார். அதுதான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. ஆனால் கார்கில் போரின்போது கயானியுடன் முக்கிய ஆலோசனைகளைக் கேட்காமல் கயானியை ஓரம் கட்டி வைத்திருந்தார் முஷாரப் என்று கூறியுள்ளார் மாலிக்.
ஆனால் இதே முஷாரப்தான் பின்னர் கயானியை 2007ம் ஆண்டு தான் அதிபராக இருந்தபோது, தலைமை ராணுவத் தளபதியாக நியமித்தார். கயானியும் 6 வருடம் தலைமைத் தளபதியாக இருந்து வந்தார்.
இந்த நூல் குறித்து கயானியோ அல்லது முஷாரப்போ இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
கார்கில் நடவடிக்கைக்கு முழுக்க முழுக்க முஷாரப்பே காரணம் என்றும். பிரதமர் ஷெரீப்புக்குக் கூட இதுகுறித்து முஷாரப் முழுமையாக விளக்கவில்லை என்றும் மாலிக் மேலும் கூறியுள்ளார்.
உண்மையில் ஷெரீப்பையும் முஷாரப் ஏமாற்றித்தான் கார்கில் போரில் ராணுவத்தை ஈடுபடுத்தினார். அவரது சுய வெறியின் காரணமாகவே இந்தப் போர் மூண்டது என்பதும் கூட முக்கியானது.
கார்கிலில் போர் மூண்டபோது சீனாவில் இருந்தார் முஷாரப். அங்கிருந்து தனது ராணுவ தளபதிகளுடன் அவர் கார்கில் போர் குறித்து ஆலோசனை நடத்தினார் என்றும் மாலிக் கூறியுள்ளார்.
மிக மிக முக்கியமான போர் குறித்த விவரத்தை இன்னொரு நாட்டில் உட்கார்ந்து கொண்டு முஷாரப் தொலைபேசியில் பேசியதை அப்போது ராணுவமே எதிர்பார்க்கவில்லை எனறும் மாலிக் கூறியுள்ளார்.
மாலிக் முன்பு ஷெரீப்புக்கு நெருக்கமானவராக இருந்தவர். பின்னர் 1999ஆம் ஆண்டு நடந்த ராணுவப் புரட்சிக்குப் பின்னர் முஷாரப்புக்கு ஆதரவாக திரும்பியவர் ஆவார்.
இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த புத்தகத்தில் முஷாரப் பற்றியும் கார்க்கில் போர் பற்றியும் மாலிக் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.