தேசதுரோக குற்றச்சாட்டு: இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் முஷரப் பதில் வழக்கு
இஸ்லாமாபாத்: தன் மீதான தேசதுரோக குற்றச்சாட்டை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு எதிராக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபரும் , ராணுவ தலைமை தளபதியுமான பர்வேஸ் முஷரப் மீது பெனாசிர் கொலை வழக்கு, தேசதுரோக வழக்கு உள்பட 5 வழக்குகள் உள்ளன. தற்போது அவர் பாகிஸ்தானில் உள்ள தனது பண்ணை வீட்டில் வீட்டுக் காவலில் இருக்கிறார். தேசதுரோக வழக்கு தவிற மற்ற நான்கு வழக்குகளிலும் முஷரப்புக்கு ஜாமீன் கிடைத்து விட்டது. தேசதுரோக குற்றச்சாட்டை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் முஷரப், வருகிற 24-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்திற்கு எதிராக முஷரப் சார்பில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து முஷரப்பின் வழக்கறிஞர் முகமது அலி சைப் கூறுகையில், ‘முஷரப் ராணுவ தளபதியாக இருந்தவர். பாகிஸ்தான் ராணுவ சட்டம் 1952-ன் படி இவர் மீது விசாரணை நடத்த சிறப்பு கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை. நெருக்கடிநிலை பிரகடம் செய்தது ராணுவம் எடுத்த கூட்டு முடிவு. அதில் தனிப்பட்ட ஒருவரின் பொறுப்பு ஆகாது. ஆகவே இதை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம்' என்றார்.