பெனாசிர் பூட்டோ கொலைக்கு முஷாரப் தான் பொறுப்பு: அமெரிக்க பத்திரிக்கையாளர்
இஸ்லாமாபாத்: முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலைக்கு முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் தான் பொறுப்பு என்று அமெரிக்க பத்திரிக்கையாளர் மார்க் சீகல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் அமெரிக்க பத்திரிக்கையாளரான மார்க் சீகல் கடந்த 1ம் தேதி தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். 4 பக்கங்கள் கொண்ட வாக்குமூலத்தில் அவர் என்ன தெரிவித்துள்ளார் என்ற விபரம் தெரிய வந்துள்ளது.
அந்த வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது,
பெனாசிர் பூட்டோ கொலைக்கு முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரப் தான் பொறுப்பு. தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக பெனாசிர் முஷாரப்பிடம் தெரிவித்தும் அவர் கண்டுகொள்ளாததால் அவர் தான் பெனாசிரின் கொலைக்கு பொறுப்பு.
பெனாசிர் பூட்டோவை கொலை செய்ய திட்டமிட்டு போனில் பேசிப்பட்டதை வளைகுடா நாட்டைச் சேர்ந்த உளவுத் துறை கண்டுபிடித்தது. ஜெனரல் முஷாரபின் 3 உதவியாளர்கள் அந்த கொலை திட்டத்தில் பங்கு கொண்டது அந்த போன் காலில் தெரிய வந்தது.
வெளிநாட்டில் இருந்து தனக்கு பாதுகாப்பு குழுவை வரவழைக்குமாறு பெனாசிர் முஷாரபை கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் பெனாசிரின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை.
பூட்டோவின் பாதுகாப்பின் ஒரு அங்கமான மொபைல் ஜாம்மர்கள் கூட செயல்படவில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.