9 வகை மருத்துவ பிரச்சனையால் முஷாரப் அவதி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் 9 வகையான மருத்துவ பிரச்சனைகளால் அவதிப்படுவதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 2ம் தேதி வழக்கு ஒன்றில் ஆஜராக நீதிமன்றத்திற்கு சென்ற வழியில் முஷாரப்புக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் முஷாரப்பின் உடல் நலம் குறித்த அறிக்கை சிறப்பு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில் முஷாரப் இதய பிரச்சனை, மன அழுத்தம், தோள் பிரச்சனை, ரத்தத்தில் அதிக கொழுப்பு, புரோஸ்டேட் வீக்கம், முதுகுத் தண்டு மற்றும் எலும்பு வலியால் அவதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து முஷாரப் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து இரண்டு நாட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.