பயணிகளுக்கு மது அளிக்க மறுத்த முஸ்லீம் ஏர் ஹோஸ்டஸ் சஸ்பெண்ட்
நியூயார்க்: அட்லாண்டாவை சேர்ந்த எக்ஸ்பிரஸ் ஜெட் நிறுவனம் பயணிகளுக்கு மது வழங்க மறுத்ததால் தன்னை சஸ்பெண்ட் செய்துள்ளதை எதிர்த்து இஸ்லாமிய பெண் விமான சிப்பந்தி ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா நகரைச் சேர்ந்தது எக்ஸ்பிரஸ் ஜெட் விமான நிறுவனம். அந்த நிறுவனத்தில் விமான சிப்பந்தியாக வேலை செய்து வருபவர் இஸ்லாமியரான சாரி ஸ்டான்லி(40). அவர் கடந்த 3 ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்திற்கு மாறினார்.
இஸ்லாத்தின்படி மது அருந்தவோ பிறருக்கு கொடுக்கவோ கூடாது என்பதை அவர் இந்த ஆண்டு தெரிந்து கொண்டுள்ளார். இதையடுத்து விமானத்தில் பயணிகளுக்கு தன்னால் மது அளிக்க முடியாது என்று கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி கூறியுள்ளார். அதற்கு விமான நிறுவன நிர்வாகவோ யாராவது மது கேட்டால் பிற சிப்பந்தியை அழைத்து அவரை வழங்குமாறு கூறுங்கள் என்று தெரிவித்துள்ளது. அவரும் அதன்படி செய்துள்ளார்.
இந்நிலையில் சாரி பயணிகளுக்கு மது வழங்க மறுப்பதாகவும், தலையில் ஸ்கார்ப் அணிவதாகவும் சக சிப்பந்தி ஒருவர் கடந்த மாதம் புகார் தெரிவித்தார். இதையடுத்து சாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் 12 மாதங்கள் கழித்து பணிநீக்கம் செய்யப்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிறுவன நிர்வாகத்தின் இந்த முடிவை எதிர்த்து சாரி வழக்கு தொடர்ந்துள்ளார்.