இங்கிலாந்தில் ஸ்கார்ப் அணியும் முஸ்லீம் பெண்கள் தாக்கப்படும் அபாயம் அதிகம்: திடுக் தகவல்
லண்டன்: இங்கிலாந்தில் தலையில் ஸ்கார்ப் அணியும் முஸ்லீம் பெண்கள் தாக்கப்படும் அபாயம் அதிகம் உள்ளது தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்தில் தலையில் ஸ்கார்ப் அணியும் மற்றும் முகத்தை துணியால் மறைத்துச் செல்லும் பெண்கள் அதிக அளவில் தாக்கப்படும் அபாயம் உள்ளது தெரிய வந்துள்ளது.
இது குறித்து இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்காணித்து வரும் இங்கிலாந்தைச் சேர்ந்த எம்.ஏ.எம்.ஏ. என்ற அமைப்பின் தலைவர் பியாஸ் முகல் கூறுகையில்,
தலையில் ஸ்கார்ப் அணிந்து செல்லும் முஸ்லீம் பெண்கள் மீது அதிக அளவில் தாக்குதல் நடக்கிறது. மேலும் முகம் தெரியாத அளவுக்கு பர்தா அணியும் பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை பெண்கள் மீது காட்டுகிறார்கள்.
இங்கிலாந்தில் தாக்கப்படும் இஸ்லாமியர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். அவர்களை கிண்டல் செய்வது, அவர்களின் பர்தாவை கிழிப்பது, தாக்குவது, மிரட்டுவது உள்ளிட்டவைகளை விஷமிகள் செய்கிறார்கள்.
ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பிணையக் கைதிகளை தலையை துண்டித்து கொலை செய்வதும், ஐரோப்பாவில் அகதிகள் பிரச்சனை அதிகரித்துள்ளதும் இந்த தாக்குதல்களுக்கு காரணம் என்றார்.