93 ரோஹிங்கியா அகதிகள் கைது... மலேசியாவுக்கு தப்ப முயன்ற போது சிக்கினர்!
மியான்மரிலிருந்து மலேசியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற 93 ரோஹிங்கியா அகதிகளை மியான்மர் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
யாங்கோன்: மியான்மரிலிருந்து மலேசியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற 93 ரோஹிங்கியா அகதிகளை மியான்மர் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மேற்கு ரக்ஹைன் மாநிலத்தில் அமைந்துள்ள முகாம்களில் இருந்து தப்பிய ரோஹிங்கியாக்கள், கடல் வழியாக மலேசியாவை அடையும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது. மலேசியாவுக்கு செல்லும் நோக்கத்தில் முகாம்களிலிருந்து தப்பிய அவர்களை, மீண்டும் முகாம்களுக்கே திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கடந்த நவம்பர் 16 ம் தேதி, மியான்மரின் வர்த்தக மையமாக அறியப்படும் யாங்கோன் அருகே படகு ஒன்றிலிருந்த 106 ரோஹிங்கியாக்கள் கைது செய்யப்பட்டனர். மலேசியா செல்ல முயன்ற இவர்கள், படகு என்ஜின் பழுதான நிலையில் மியான்மர் அதிகாரிகளிடம் சிக்கினர். இத்துடன், தெற்கு ரக்ஹைன் கடல் பகுதியிலிருந்து மலேசியா செல்ல முயற்சித்த 80 ரோஹிங்கியாக்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மியான்மர் கடல்பகுதியில் மழையின்றி, சாதகமான வானிலை காணப்படுவதால், இவ்வாறான படகு வழிப்பயணங்கள் மீண்டும் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், கடந்த சில வாரங்களில் படகு வழியாக மலேசியாவில் தஞ்சமடையும் 3 முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் 2017ல் மியான்மரில் ஏற்பட்ட தொடர் வன்முறைகள் மற்றும் ராணுவத்தின் தேடுதல் வேட்டைக் காரணமாக 8 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர். இதே போல், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் இந்தியாவில் அகதிகளாக வசித்து வருகின்றனர்.