என்ன நடக்கிறது மியான்மரில்?.. ராணுவத்தின் பக்கத்தையே கட்டம் கட்டித் தூக்கிய பேஸ்புக்
மியான்மர்: வன்முறையைத் தூண்டும் பதிவுகளை வெளியிட்டதாக, மியான்மர் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தை பேஸ்புக் நீக்கியுள்ளது.
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில், ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
புதுச்சேரியில் மேலும் ஒரு காங். எம்.எல்.ஏ ராஜினாமா செய்தார்- நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்தது!
ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது. இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.
வீட்டுக் காவல்
அதுமட்டுமின்றி, ஆங் சான் சூச்சி, அதிபர் வின் ம்யிண்ட் மற்றும் மூத்தத் தலைவர்களையும் ராணுவம் வீட்டுக் காவலில் வைத்தது. இதனால், ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்களின் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதன் காரணமாக மியான்மரில் ஃபேஸ்புக் உள்ளிட்ட இணையதள சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் கண்டனம்
குறிப்பாக, மாண்டலேவில் மியான்மர் ராணுவத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ராணுவத்தினர் போராட்டக்காரர்கள் மீது நடத்திய தாக்குதலில், 2 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதற்கு ஐ. நா.,பிரான்ஸ், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளன.
பக்கம் நீக்கம்
இந்நிலையில், அங்கு ராணுவத்தால் நடத்தப்படும் "True News" செய்தி பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் அதிரடியாக தடை செய்துள்ளது. இதற்கு முன்னதாக, வன்முறைகளை பரப்பும் வகையில் செயல்பட்ட பல்வேறு பக்கங்களையும் பேஸ்புக் நீக்கியிருந்தது.
நீக்கம் ஏன்?
"மீண்டும் மீண்டும் வன்முறையைத் தூண்டும் வகையிலான செய்திகளை பகிர்ந்து எங்கள் கோட்பாடுகளை மீறியதற்காக" 'True News' தகவல் குழு பக்கம் அகற்றப்பட்டதாக பேஸ்புக்கின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.