இந்திய என்.ஜி.ஓ.விற்கு கிடைத்த அங்கீகாரம்.. இளவரசர் ஹாரியின் திருமணத்தில் பங்கேற்கும் ‘மைனா மஹிளா’!
இளவரசர் ஹாரியின் திருமணத்தில் இந்தியாவைச் சேர்ந்த என்.ஜி.ஓ. ஒன்றும் பங்கேற்க இருக்கிறது.
Recommended Video
மும்பை: இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் திருமணத்தில் பங்கேற்க இந்தியாவைச் சேர்ந்த மைனா மஹிளா என்ற என்.ஜி.ஓ.விற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மெகன் திருமணம் நாளை நடைபெற உள்ளது. இவரது திருமணத்தை காண இளவரசரின் ஆதரவாளர்கள் மற்றும் விருந்தினர்கள் என பல்வேறு நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வந்துள்ளனர். இந்த திருமணமானது லிண்ட்சர் நகரில் நடைபெறுகிறது.
திருமண நிகழ்ச்சியை காண்பதற்காக கடந்த ஒருவாரமாக லிண்ட்சர் மாளிகை முன்பு சாலைகளில் கூடாரம் அமைத்து தங்கி வருகின்றனர். இதனால் லிண்ட்சர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
அழைப்பு:
இந்தத் திருமணத்திற்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், ஹாரியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மும்பையைச் சேர்ந்த என்.ஜி.ஓ. ஒன்றிற்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
7 நிறுவனங்கள்:
முன்னதாக இளவரசர் ஹாரி தனது திருமணத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களுக்கு திருமண பரிசு தருவதற்கு பதில் ஏழு தொண்டு நிறுவனங்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு நிறுவனங்களில் ஒன்று தான் இந்த மும்பையைச் சேர்ந்த ‘மைனா மஹிளா'வும் ஒன்று. மைனா மஹிளாவைத் தவிர மற்ற ஆறு நிறுவனங்களும் லண்டனில் இயங்கி வருபவை என்பது குறிப்பிடத்தக்கது.
இளம்பெண்ணின் முயற்சி:
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் குடிசை பகுதியில் இருக்கும் சில பெண்களுடன் சேர்ந்து, சுஹானி என்ற இளம்பெண் ஆரம்பித்தது தான் இந்த ‘மைனா மஹிளா' எனும் அரசுசாரா அமைப்பு. இந்த அமைப்பின் நோக்கம் மாதவிடாய் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான்.
அங்கீகாரம்:
இளவரசர் ஹாரியின் திருமணத்தில் தனது தோழிகளுடன் சுஹானி பங்கேற்க இருக்கிறார். இதன் மூலம் மைனா மஹிளாவிற்கு அங்கீகாரம் மட்டுமல்ல, நிதி உதவியும் கிடைக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.