ஒரு "வடகறி"யை கூட நிம்மதியாக சாப்பிட முடியாத நிலையில் வட கொரியா அதிபர் கிம்!
சியோல்: வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் சர்வ வல்லமை பெற்ற தலைவராக வலம் வந்தாலும் கூட, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை எப்போதும் பதட்டத்திலேயே வைத்திருந்தாலும் கூட, அவர் நிம்மதியாக தூங்க முடியாமல் தவிக்கிறாராம்.
சாப்பாட்டிலும் அவர் மிக மிக கவனமாக இருக்க வேண்டியுள்ளதால் சரியாக சாப்பிடுவதில்லையாம். தனது தனிப்பட்ட பாதுகாப்பு குறித்து எப்போதும் அச்சத்திலேயே வாழ்ந்து வருகிறாராம் கிம்.
இதனால் அவருக்கு சரிவர தூக்கம் வராமல் இன்சோம்னியா பிரச்சினை அவரை வாட்டி வதைக்கிறதாம். தென் கொரிய உளவாளிகள் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
உயிர் குறித்த அச்சம்
தன்னை யாரேனும் படுகொலை செய்து விடுவார்களோ என்ற அச்சம் அவருக்கு எப்போதும் இருக்கிறதாம். இதனால் நினைத்ததை சாப்பிட முடியாமல், மது அருந்த முடியாமல் தவிக்கிறாராம்.
ஏறி வரும் உடல் எடை
மேலும் அவரது உடல் எடையும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது. 2012ம் ஆண்டு அவர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது அவரது எடை 90 கிலோவாக இருந்தது. தற்போது அது 130 கிலோவாக கூடி விட்டதாம்.
நிழலே பயமுறுத்துகிறதாம்
சரமாரியாக பலரை படுகொலை செய்ய உத்தரவிட்டு பெரும் சர்ச்சைக்குள்ளானவர் கிம். ஆனால் அவரது நிழலே இப்போது அவருக்கு பயமுறுத்த ஆரம்பித்து விட்டதாக தென் கொரிய உளவாளிகள் கூறுகின்றனர்.
மக்களைக் கண்டும் பயம்
ஆனால் தன்னைப் பற்றிய தனது பிரச்சினைகள் குறித்த எந்த செய்தியும் வட கொரிய மக்களுக்குத் தெரிந்து விடாதபடி மிகவும் கவனமாக இருக்கிறாராம் கிம்.
கொலை பயம்
தனது நிலை தெரிய வந்தால் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு தன்னைப் படுகொலை செய்ய முயலலாம் என்ற அச்சமும் கிம்மிடம் உள்ளதாம். இதனால்தான் தன்னைப் பற்றிய எந்த ரகசியமும் வெளி வந்து விடாமல் அவர் கவனமாக இருப்பதாக உளவாளிகள் சொல்கிறார்கள்.