திருடிய களைப்பில் ஹவுஸ் ஓனருடன் தூங்கி.. கிளம்பும்போது "கிஸ்" கொடுத்து மாட்டிய திருடன்!!
நியூயார்க்: அமெரிக்காவில் வீட்டில் திருட வந்த திருடன், திருடிய பின் உரிமையாளர்களுடன் படுத்துத் தூங்கி சிக்கியுள்ளார்.
அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உள்ள போர்ட் லேண்ட் பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்ட் டீன் டெபியூடிஸ் (35). கொள்ளையடிப்பதைத் தொழிலாகக் கொண்ட ரிச்சர்ட், சம்பவத்தன்று இரவு போர்ட் லேண்டில் உள்ள வீடொன்றில் திருடச் சென்றுள்ளார்.
வீட்டின் ஒவ்வொரு அறையாக ஓடியாடி விலையுயர்ந்த பொருட்களைக் கொள்ளையடித்த ரிச்சர்ட்டுக்கு களைப்பு ஏற்பட்டது. இதனால், சிறிது நேரம் ஓய்வெடுக்க விரும்பிய ரிச்சர்ட், வீட்டு உரிமையாளரின் படுக்கை அறைக்குள் நுழைந்துள்ளார். அங்கு ஏற்கனவே, வீட்டு உரிமையாளரும், அவரது மனைவியும் தூங்கிக் கொண்டிருக்க ரிச்சர்ட்டும் அவர்களுடன் சேர்ந்து கட்டிலில் தூங்கியுள்ளார்.
ஆடைகளை கழற்றி வைத்து விட்டு நிர்வாணமாக தூங்கிய ரிச்சர்ட், பாதுகாப்பிற்காக கத்தியை மட்டும் தனக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டு தூங்கியுள்ளார். சிறிது நேரம் தூங்கி எழுந்த பின், புறப்படத் தயாரான ரிச்சர்ட் தனது அருகில் தூங்கிக் கொண்டிருந்த வீட்டு உரிமையாளரின் கன்னத்தில் முத்தமிட்டுள்ளார்.
இதில் திடுக்கிட்டு விழித்த அந்நபர் திருடனைப் பார்த்து பயத்தில் அலறியுள்ளார். பின் தன்னிடமிருந்த துப்பாக்கியால் ரிச்சர்ட்டை நோக்கி சுட்டுள்ளார். ஆனால், காயம் படாமல் அங்கிருந்து தப்பிச் சென்றார் ரிச்சர்ட்.
இந்த சம்பவம் நடந்து சில தினங்களுக்குப் பிறகு வேறொரு வீட்டில் கொள்ளையடித்த போது போலீசில் சிக்கினார் ரிச்சர்ட். அப்போது போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் மேற்கூறிய தகவல்களை அவன் தெரிவித்துள்ளார். தற்போது ரிச்சர்ட்டை கைது செய்த போலீசார், அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.