டென்னசி தமிழ்ச் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு.. நடிகர் நெப்போலியன் வாழ்த்து!
நேஷ்வில்(யு.எஸ்): டென்னசி தமிழ்ச்சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு நடிகர் நெப்போலியன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டென்னசி மாநிலத்தின் தலைநகரமான நேஷ்வில் நகரில் கடந்த 34 ஆண்டுகளாக டென்னசி தமிழ்ச் சங்கம் செயல்பட்டு வருகிறது.
இந்த சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடிகர் நெப்போலியனின் ஜீவன் டெக்னாலஜி அலுவலகத்தில் நடைபெற்றது.
செயற்குழு கூட்டத்தில் சங்க ஆலோசகர்கள், வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவைக்கான பிரதிநிதிகள், தன்னார்வத் தொண்டர்களுடன் முன்னாள் தலைவர்கள் டாக்டர் தெய்வ நாயகம், பால சுந்தரம், செந்தில் நாதன், சுந்தரமூர்த்தி, முனிரத்னம் ஆகியோர் பங்கேற்றனர்.
அனைவரின் ஏகோபித்த ஆதரவுடன் சிவராமன் கங்காதரன் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவராக முத்தையா நடராஜன், செயலாளராக சபாபதி சதாசிவம், துணைச் செயலாளராக பிரகாஷ் செல்வராஜ், பொருளாளராக தமிழ் ராஜேந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தற்போதைய நிர்வாகிகள் ராஜ்குமார் சுபாஷ், கோபி சுந்தரேசன், ராஜாராம் பழனிசாமி, சீதாராமன் ராஜேந்திரன் பொறுப்புகளை புதிய நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். அடுத்து வரும் பொங்கல் விழாவுக்கான ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளனர்.
புதிய நிர்வாகிகள் முன்னாள் மத்திய அமைச்சர் நடிகர் நெப்போலியனையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
நேஷ்வில் நகரில் வசித்துவரும் நடிகர் நெப்போலியன் டென்னசி தமிழ்ச் சங்க வளர்ச்சிக்கு தனி அக்கறையுடன் உறுதுணையாக செயல்பட்டு வருவது குறிப்பிடத் தக்கதாகும்.