செளதி மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு- 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
ரியாத்: செளதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல் சாத்தை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகள் இடையேயும் 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பெல்ஜியம், அமெரிக்கா ஆகிய நாடுகளில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு பிரதமர் மோடி செளதி அரேபியாவில் 2 நாள் பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின் நிறைவு நாளான நேற்று அவர் தலைநகர் ரியாத்தில் சவுதி அரேபிய தொழில் அதிபர்கள் மற்றும் இந்திய வர்த்தக தலைவர்கள் கூட்டத்தில் பேசினார்.
இந்நிகழ்ச்சிகளுக்கு பின்னர், செளதி சுகாதாரத்துறை அமைச்சர் அல்-பாலிக், வெளியுறவுத்துறை அமைச்சர்அடெல் அல்-ஜூபைர் ஆகியோரையும் சந்தித்தார்.
இதைத் தொடர்ந்து செளதி மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல் சாத்தை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். கேரளாவில் கி.பி.629-ம் ஆண்டில் அரேபிய வணிகர்களால் கட்டப்பட்ட சேரமான் ஜூமா மசூதியின் தங்க முலாம் பூசிய மாதிரி வடிவத்தை மன்னருக்கு பிரதமர் மோடி நினைவுப் பரிசாக வழங்கினார்.
செளதியின் உயர்ந்த விருதை மோடிக்கு மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல் சாத் வழங்கினார். அப்போது இருநாடுகள் இடையே ராணுவ உறவை மேம்படுத்துவது, வர்த்தகம், முதலீடு, தீவிரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் ஒத்துழைத்து செயல்படுவது பற்றி அவர்கள் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து இருநாடுகள் இடையேயும் புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனது.