வறுமையை எந்த புத்தகத்திலிருந்தும் கற்கவில்லை.. வறுமையிலேயே வாழ்ந்துள்ளேன்.. சவுதியில் மோடி பேச்சு
ரியாத்: வறுமையை நான் எந்த புத்தகத்திலும் கற்கவில்லை. ஆனால் வறுமையில் வாழ்ந்துள்ளேன் என சவுதியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
சவுதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல்சாத், இளவரசர் முகமது பின் சல்மான் அல்சாத் ஆகியோரின் அழைப்பை ஏற்று நேற்று சவுதி சென்றார் மோடி. 2 நாட்கள் பயணமாக சென்ற மோடி, ரியாத்தில் நடைபெற்ற எதிர்கால முதலீட்டு நிறுவன மன்றத்தின் 3ஆவது அமர்வில் கலந்து கொண்டார்.
அப்போது அந்த அமர்வில் நடந்த கேள்வி பதிலில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர் கூறுகையில் நான் எந்த ஒரு பெரிய அரசியல் பின்னணி உள்ள குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல. நான் வறுமையை எந்த புத்தகத்திலிருந்தும் கற்றுக் கொள்ளவில்லை.
ரயில்வே பிளாட்பாரம்
ஆனால் நான் வறுமையிலேயே வாழ்ந்தேன். ரயில்வே பிளாட்பாரத்தில் டீ விற்றுள்ளேன். அங்கிருந்துதான் தற்போது இந்த நிலையை அடைந்துள்ளேன். இன்னும் சில வருடங்களில் வறுமையை ஒழிப்பதில் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும்.
அதிகாரம்
வறுமைக்கு எதிராக எனது போராட்டம் ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கும். ஒரு ஏழை தனது வறுமையை தானே துடைத்தெறிவதாக கூறுவதைவிட பெரிய திருப்தி வேறு எதுவும் இருக்காது.
ஏழைகள்
கழிவறை கட்டிக் கொடுத்தல், வங்கிக் கணக்கு திறந்து கொடுத்தல் உள்ளிட்ட செயல்களால் இந்தியாவில் ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுவிட்டது.
திருப்தி
இந்தியாவை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாகவும் வறுமையில்லா நாடாகவும் மாற்றும் போது உலக நாடுகளின் பார்வையும் மாறும். உலகம் மேம்பட நமது பங்களிப்பை அளிப்பதால் திருப்தியும் ஏற்படுகிறது என்றார் மோடி.