சீனாவை அடக்க இந்தோனேஷியா உறவு ஏன் இந்தியாவுக்கு தேவை? மோடி விசிட் நோக்கம் இதுதான்
ஜகார்த்தா: இந்தோனேஷியாவுடனான இந்தியாவின் உறவு என்பது, இந்தியாவுக்கு பல வகைகளில் சீனாவிடமிருந்து பாதுகாப்பை தர வல்லது என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.
நீண்ட கால எல்லை பிரச்சினை, அணு சப்ளை குரூப்பில் இந்தியாவுக்கு இடம் தரவிடாமல் மறுப்பது, பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத குழுக்கள் மீது சர்வதேச தடை விதிக்க விடாமல் ஐநாவில் முட்டுக்கட்டை போடுவது போன்ற நடவடிக்கைகளின் மூலம், சீனா இந்தியாவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தபடி உள்ளது.
இந்த நிலையில்தான் அமெரிக்காவுடன் நட்பை தொடரும் அதே வேளையில், கிழக்கு ஆசிய நாடுகளுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது காலத்தின் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பாதுகாப்பு கொள்கை என்பது இதுவரை பிரிட்டிஷ் காலத்திய நடைமுறையை பின்பற்றியே இருந்து வந்தது. நரேந்திர மோடி அரசு இதை மாற்றி, பாரம்பரியமான நமது கடல் வழி உறவுகளை பலப்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை தர ஆரம்பித்துள்ளது. அதில் ஒரு நாடுதான் இந்தோனேஷியா.
முதல் சுற்றுப் பயணம்
இந்தோ-பசிபிக் மண்டலத்திலுள்ள நாடுகளுடனான உறவை பலப்படுத்துவதன் மூலம், புவிசார் பொருளாதார மேம்பாட்டையும், பாதுகாப்பையும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது மத்திய அரசு. இந்தோனேஷியாவுடனான வரலாற்று ரீதியிலான, கலாச்சாரம் மற்றும் வியூக அடிப்படையிலான உறவை பலப்படுத்தும் வகையில், பிரதமர் மோடி முதல் முறையாக இந்தோனேஷியா சென்றுள்ளார். இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூரில் மோடி 5 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
முக்கியமான நாடு
இந்தியாவின் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கும் இந்தோனேஷியாவின் அச்சே பகுதிக்கும் நடுவே 80 நாட்டிகல் மைல் தொலைவு கூட இல்லை என்பதில் இருந்து அந்த நாடு நமக்கு அண்டை நாடுதான் என்ற அடிப்படையில் இந்த சுற்றுப் பயணம் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. ராஜதந்திர வியூக அடிப்படையில் பார்த்தால் அமெரிக்கா, சீனாவை போன்றே, இந்தியாவுக்கு இந்தோனேஷியாவும் முக்கியமான நாடு. காரணம், இந்தோ-பசிபிக் மண்டலத்தில் இந்தோனேஷியா அமைந்துள்ள பூகோள இடம் அப்படி.
கிழக்கு நோக்கி கவனம்
இந்த பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நாடாக தன்னை உருமாற்ற இந்தோனேஷியா முயன்று வரும் இந்த சூழ்நிலையில், இந்தியாவின் நட்புக்கரம் அதை வலுப்படுத்த உதவும். சீனாவின் அதிகார பரவலை தடுக்க உதவும் முக்கியமான நாடுகளில் ஒன்றுதான் இந்தோனேஷியா. இந்தியாவின் பொருளாதார, ராணுவ நடவடிக்கைகளை சபாங் தீவில் மேற்கொள்ள இந்தோனேஷியா அனுமதித்திருப்பது என்பது, மோடி அரசின் "ஆக்ட் ஈஸ்ட்" கொள்கைக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.
டெல்லியை நோக்கி ஜகார்த்தா
சீனாவின் அத்துமீறல்களை இந்தோனேஷியா கண்டிக்க தொடங்கியுள்ளது. இதனால் அந்த நாட்டின் வெளியுறவை கொள்கை புதுடெல்லியை நோக்கியதாக மாறத் தொடங்கியுள்ளது. இந்தோனேஷியா அதிபர் ஜோகோ விடோடோ கொண்டு வர உள்ள புதிய கடல் வழி கொள்கைக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது. இந்த கொள்கை இந்தியாவுக்கும் பயனுள்ளதாக அமையப்போகிறது. மேலும், இந்தோனேஷியா அதிகப்படியான இஸ்லாமிய மக்கள் வசிக்கும் நாடு. அந்த நாட்டுடனான இந்தியாவின் நெருக்கமான உறவு என்பது, காஷ்மீர் பிரச்சினை மற்றும் ஜிகாதி தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளின் நோக்கத்தை திரித்து பரப்பும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு சவுக்கடி கொடுப்பதை போல அமையும்.
களமிறங்குகிறது இந்தியா
கிழக்கு ஆசிய நாடுகளை ஒரு பார்வையாளரை போல இருந்து இந்தியா பார்த்து வந்த காலம் மாறிவிட்டது. இப்போது இந்த பிராந்தியத்தில் தன்னை ஆக்டிவாக காட்டிக்கொள்ள இந்தியா விழைகிறது. இதனால் பரஸ்பரம் பாதுகாப்பை அதிகரித்துக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தோனேஷிய கடல் விவகாரத்துறை அமைச்சர் லுகுட் பண்ட்ஜெய்தான் "இந்தியா மற்றும் இந்தோனேஷியா உறவு ஆசியாவில் சமத்துவமான சக்தியை நிலைநாட்ட மிக முக்கியம்" என கூறியுள்ளதில் இருந்து இந்தியாவுடனான நெருக்கத்தை இந்தோனேஷியா விரும்புவதை புரிந்து கொள்ளலாம்.
இந்தியாவின் பொறுப்பு
இந்தோ-பசிபிக் மண்டலத்தில், முக்கியமான நாடாக உருவாக முயலும்போது இயல்பாகவே இந்தியாவிற்கு சில கூடுதல் பொறுப்புகளும் சேர்ந்தே ஏற்படும் என்பதை மறுக்க முடியாது. சீனா போன்ற ஒரு வல்லரசு நாடு, இந்தியாவிற்கு, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள பூகோள ரீதியிலான வாய்ப்புகளை வேரறுக்க முயலும் நேரத்தில், இந்தியா அதற்கு பெரும் முதலீட்டுடன் பதிலடி தர வேண்டியிருக்கும். கூட்டு ராணுவ பயிற்சிகள், ரோந்துகள், மனிதாபிமான உதவிகள், அடிப்படை கட்டுமான பணிகளை இணைந்து மேற்கொள்வது போன்றவற்றில் முதலீடு செய்வதன் மூலம், இந்த பிராந்தியத்தில் இந்தியாவின் வல்லாதிக்கம் நிலை நாட்ட வாய்ப்பு ஏற்படும்.