பாகிஸ்தான் பயணத்தின்போது, நவாஸ் ஷெரிப் தாய் காலை தொட்டு ஆசி பெற்ற மோடி
லாகூர்: இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் தாயாரிடம் சென்று குனிந்து அவரது காலை தொட்டு வணங்கி ஆசி பெற்றதாக ஷெரிப் மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.
ரஷ்யா, ஆப்கானிஸ்தான் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நேற்று திடீரென பாகிஸ்தானின், லாகூருக்கு விமானத்தில் சென்று இறங்கினார். பயணத்திற்கு சில மணி நேரங்கள் முன்புதான், அவர் தனது டிவிட்டரில் இத்தகவலை தெரிவித்திருந்தார்.
இந்திய பிரதமராக வாஜ்பாய் ஆட்சி செய்த காலத்தில் பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டார். பின்னர் ஒரு தசாப்தம் கழித்து பாகிஸ்தான் சென்ற முதல்வர் பிரதமர் மோடிதான். இந்த திடீர் பயணம், உலகமெங்கிலும் கடும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது.
லாகூரின் புறநகர் பகுதியில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ரைவிண்ட் மாளிகையில் அவரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு நவாஸ் ஷெரீப் விருந்து அளித்தார். சைவ உணவு வகைகள் பரிமாறப்பட்டன என்று கூறப்படுகிது.
அவர்கள் பேசிக் கொண்டிருந்த மண்டபத்துக்குள் நவாஸ் ஷெரீப்பின் தாயார் உள்ளிட்ட குடும்பத்தினரும் வந்தனர். அப்போது மோடி, ஷெரிப்பின் தாயாரிடம் சென்று குனிந்து அவரது காலை தொட்டு வணங்கி ஆசி பெற்றதாக அந்த மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.
பிரதமர் மோடியுடன் பாகிஸ்தான் சென்ற குழுவினரில் குறிப்பிட்டபேர்தான் அவருடன் நவாஸ் ஷெரீப்பின் மாளிகைக்குள் சென்றுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டுள்ளன.