2017ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி பெரிய விண்கல் பூமியைத் தாக்கப் போகுதாம்!
வாஷிங்டன்: மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியைத் தாக்க வந்து கொண்டிருப்பதாகவும், 2017ம் ஆண்டு செப்டம்பரில் அது பூமி மீது மோதும் வாய்ப்பிருப்பதாவும் புதிய பீதியைக் கிளப்பி விட்டுள்ளனர் நாசா விஞ்ஞானிகள்.
விண்வெளியில் எண்ணிலடங்கா விண்கற்கள் மிதக்கின்றன. அவை அவ்வப்போது புவி மண்டலத்துக்குள் ஊடுருவும் போது, புவியின் ஈர்ப்பு சக்தி காரணமாக பூமியில் விழுந்து நொறுங்குகின்றன.
இவற்றில் பெரும்பாலான விண்கற்கள் வரும் வழியிலேயே எரிந்து சாம்பலாகி விடுகின்றன. சில கற்கள் பல சிறிய துண்டுகளாக நொறுங்கி சிதறுகின்றன.
வேலூர் சம்பவம்...
சமீபத்தில் கூட வேலூர் அருகே கல்லூரி ஒன்றில் விண்கல் விழுந்ததில் ஒருவர் பலியானதாகக் கூறப்பட்டது. பின்னர் இல்லையில்லை அது விண்கல் இல்லை எனக் கூறப்பட்டது. அப்படி அது விண்கல்லாக இருந்திருந்தால், அது தான் விண்கல்லால் ஏற்பட்ட முதல் மனிதப்பலி எனக் கூறப்பட்டது.
ரஷ்யாவிலும் கூட
அதேபோல ரஷ்யாவிலும் கூட ஒரு பெரிய விண்கல் பூமியை நோக்கி வந்து வானிலேயே வெடித்துச் சிதறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தையும் உலகம் பார்த்தது.
ஆபத்து...
இந்த சூழ்நிலையில், அடுத்தாண்டு 100 அடி அகலமுள்ள விண்கல் ஒன்று பூமி மீது மோத வாய்ப்பிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பூமிக்கு ஆபத்து என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
நாசா விஞ்ஞானிகள்...
அவ்வப்போது இத்தகைய பீதி கிளப்பும் வகையில், பூமி மீது ஒன்று மோதப்போகிறது, அவ்வளவு தான் உலகம் அழியப்போகிறது என வதந்தி பரவுவதுண்டு. ஆனால், பின்னர் அதனை விஞ்ஞானிகள் மறுத்து விடுவர். ஆனால், இந்த விண்கல் விவகாரத்தை நாசா விஞ்ஞானிகளே கூறியிருப்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.
2013 டிஎக்ஸ் 68 ...
இந்த விண்கல்லின் பெயர் 2013 டிஎக்ஸ் 68 (2013 TX68) ஆகும். இது தற்போது பூமியை நோக்கி வேகமாக பயணித்து வருகிறதாம்.
5ம் தேதி வந்து போகுதாம்
இம்மாதம் 5ம் தேதி வாக்கில் பூமியை 11 ஆயிரம் மைல்கள் தூரத்தில் கடந்து செல்லும் இந்த விண்கல்லானது, அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதிவாக்கில் பூமியில் மோத வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பழைய விண்கல் தான்...
இது ஒன்றும் புதிய விண்கல் அல்ல. ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பூமியை 1.3 மில்லியன் மைல் தொலைவில் இந்த விண்கல் கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது. இது இந்த விண்கல்லின் மற்றொரு விசிட் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
250 மில்லியனில் ஒரு பங்கு வாய்ப்புதான்...
இருப்பினும் பூமி மீது இந்த விண்கல் மோதுவதற்கான வாய்ப்பு 250 மில்லியனில் ஒரு பங்குதான் உள்ளதாகவும் நாசா கூறுகிறது. எனவே நிறையவே நிம்மதியாக இருக்கலாம்.
அடுத்த 100 வருஷத்துக்குப் பிரச்சினை இல்லை...
நாசா மேலும் கூறுகையில், ‘நமது பூமிக்கு அடுத்த 100 வருடங்களுக்கு இந்த விண்கல்லால் எந்தப் பிரச்சினையும் வரவாய்ப்பில்லை' என்றும் கூறியுள்ளது.
வெடித்துச் சிதறி விடும்...
ஒரு வேளை அது பூமியின் வளி மண்டலப் பகுதிக்குள் இழுக்கப்பட்டாலும் கூட அது வானிலேயே வெடித்துச்சிதறி விடும்.
ஹிரோஷிமாவை விட மோசமான பாதிப்பு ஏற்படும்...
அப்படி வெடிப்பதால் பெருமளவில் வெப்பம் வெளிக்கிளம்பும். அது ஹிரோஷிமாவை சீர்குலைத்த அணு குண்டால் ஏற்பட்ட வெப்பத்தை விட அதிகமாக இருக்குமாம்.
அயய்யோ.. அதுக்குள்ள ஏதாச்சும் பண்ணி பூமியைக் காப்பாத்திருங்கப்பா!