99 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறது அபூர்வ சூர்ய கிரகணம்... நாசா எச்சரிக்கை!
99 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றும் முழு சூரிய கிரகணத்தை பார்க்கும் பொதுமக்களுக்கு நாசா சில பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கி உள்ளது.
நியூயார்க் : 99 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றும் அரிய முழு சூர்ய கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது பாதுகாப்பில்லை என்று நாசா கூறியுள்ளது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும் போது, பூமியிலிருந்து காண்கையில் சூரியனும் நிலவும் வான் இணையலில் இருந்தால் சூரிய கிரகணம் ஏற்படும். இது ஒரு அமாவாசை நாளன்று தான் ஏற்படும். இதனால் சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப்படும்.
இந்நிலையில் ஆகஸ்ட் 21ம் தேதி அமெரிக்காவின் 14 மாகாணங்களில் முழுகிரகணம் தெரியும் என்று நாசா கூறியுள்ளது. சூரியனை நிலவு முழுவதும் மறைத்து 3 நிமிடங்கள் வரை இந்த கிரகணம் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அரிய கிரகணம்
99 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றும் முழு சூரிய கிரகணம் காண்பதற்கு அரியது என்றும் நாசா கூறியுள்ளது. எனினும் சகல பாதுகாப்பு முன்னெச்சரிக்கை விஷயங்களையும் விஞ்ஞானிகள் முன்வைத்துள்ளனர்.
விளிம்புகள் மட்டுமே தெரியும்
சூரிய கிரகணம் நிகழும் போது சூரியனின் விளிம்புகள் மட்டுமே தெரியும்.இதனை வெறும் கண்களால் பார்க்ககூடாது. பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளித் தடுப்புக் கண்ணாடிகளால் மட்டுமே காண வேண்டும்.
வெறும் கண்ணால் பார்க்க கூடாது
3 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் கிரகணக் கண்ணாடி அணிந்து கொள்வது பாதுகாப்பற்றது என்றும் நாசா கூறியுள்ளது. மேலும் ஐஎஸ்ஐ தரமற்ற கண்ணாடிகளை பயன்படுத்தி கிரகணத்தை பார்ப்பதும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
30 கோடி பேர் பார்க்க முடியும்
சூரியனின் மைய பகுதியை முழுமையாக நிலா மறைக்கிறது. இந்த சூரிய கிரகணத்தை உலகம் முழுவதும் உள்ள 30 கோடி மக்களால் இந்த கிரகணத்தை பார்க்க முடியும் என நாசா தெரிவித்துள்ளது.