செவ்வாயில் தண்ணீர்?... இன்று இரவு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறது நாசா!
நாசா: செவ்வாய் கிரகம் குறித்த முக்கிய மர்மத்திற்குத் தீர்வு கண்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய நேரப்படி இன்று இரவு 9 மணிக்கு செய்தியாளர்கள் முன்னிலையில் விரிவாகத் தெரிவிக்கவுள்ளதாகவும் அது கூறியுள்ளது.
அனேகமாக செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதையே நாசா அறிவிக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் மத்தியில் "டாக்" ஓடிக் கொண்டுள்ளது. அப்படி கண்டுபிடிக்கப்பட்டால் அது மிகப் பெரிய அறிவியல் கண்டுபிடிப்பாக அமையும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
மார்ஸ் மிஸ்டரி சால்வ்ட் என்ற தலைப்பிலான இந்த செய்தியாளர் சந்திப்பு நாசா நேரப்படி திங்கள்கிழமை காலை 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி பார்த்தால் அது நமக்கு இன்று இரவு 9 மணியாகும்.
திரவ நிலையில் தண்ணீர்
செவ்வாய் கிரகத்தில் திரவ நிலையில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது. இதுதான் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது உண்மையாக இருந்தால் மிகப் பெரிய விஷயமாகும்.
அறிவிப்புக் குழுவில் இந்தியர்
செய்தியாளர்களை 4 பேர் கொண்ட நாசா குழு சந்திக்கவுள்ளது. அதில் ஒருவர் இந்தியர் என்பது முக்கியமானது. அவரது பெயர் லூஜேந்திரா ஓஜா. இவர் ஜார்ஜியா தொழில்நுட்பக் கல்லூரியில் படித்தவர் ஆவார். இவரும் செய்தியாளர் சந்திப்பின்போது பேசவுள்ளார்.
தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தவர் ஓஜாதான்
உண்மையில் செவ்வாய் கிரகத்தில் ஓடும் நிலையில் தண்ணீர் இருப்பதாக முதலில் கூறியவர் இந்த ஓஜாதான். இவர் 2011ம் ஆண்டிலேயே இதைக் கூறியிருந்தார். செவ்வாயின் தரைப்பரப்பை ஆராய்ந்த பின்னர் இவர் இவ்வாறு கூறியிருந்தார்.
நாசா டிவியில் லைவ்
இந்த செய்தியாளர் சந்திப்பை நாசா டிவி நேரடியாக ஒளிபரப்பு செய்யவுள்ளது. வாஷிங்டனில் உள்ள நாசா தலைமையகத்தின் ஜேம்ஸ் வெப் ஆடிட்டோரியத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது.
உறைந்து போன பாலைவனம்
செவ்வாய் கிரகம் இப்போது உறைந்த நிலையில் உள்ள பாலைவனம் போல. அதன் மண்ணியல் ஆய்வுகள் அந்த கிரகமானது, தண்ணீரால் ஒரு காலத்தில் நிரம்பியிருந்ததை உணர்த்துகிறது.
துருவப் பகுதிகள்
செவ்வாய் கிரகத்தின் துருவப் பகுதியில் பனிகள் உறைந்து கிடக்கின்றன. இதை 40 வருடத்திற்கு முன்பே விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விட்டனர். இதன் மூலம் அங்கு ஆறுகள், கடல்கள் இருந்திருக்கலாம் என்பதும் உறுதியானது.
ஈர்ப்பு விசை காரணமாக
இருப்பினும் மிகவும் குறைந்த அளவிலான ஈர்ப்பு விசை மற்றும் மெல்லிய அட்மாஸ்பியர் காரணமாக இந்த தண்ணீர் ஆவியாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்தனர்.
ஆனால் இப்போது
ஆனால் தற்போது அங்கு தண்ணீர் ஓடும் நிலையில், திரவ நிலையில் இருக்கலாம் என்று வெளியாகும் தகவல்கள் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாக உள்ளது. அங்கு நிச்சயம் மனிதனால் உயிர் வாழ முடியும் என்ற நம்பிக்கையையும் விதைப்பதாக அது அமைந்துள்ளது.
உயிர்கள் இருக்கலாம்
செவ்வாயில் தண்ணீர் இருப்பது உறுதியானால் நிச்சயம் அங்கு ஏதாவது உயிரினம் இருக்கலாம். வேற்றுகிரகவாசிகள் இருக்கலாம் என்று வி்ஞ்ஞானிகள் உறுதிபட நம்புகிறார்கள்.
இந்த 4 பேரின் வாயை நோக்கி உலகமே...!
இன்று இரவு 9 மணிக்கு செவ்வாய் கிரகத்தின் அந்த மர்மம் குறித்த தகவலை சொல்லப் போவது இவர்கள்தான் - ஓஜா, மெக்கவென், வில்லியம்ஸ் மற்றும் மைக்கேல் மேயர் ஆகியோர்.