70 நாட்களுக்கு சும்மா அசையாம படுத்திருந்தா போதும்... ரூ. 11 லட்சம் சம்பளம் தருகிறது நாசா!
லண்டன்: விண்வெளி வீரர்களின் உடல்நிலை குறித்து ஆய்வு நடத்தி வருகிறது நாசா. இதன்படி, தேர்ந்தெடுக்கப் பட்ட சிலரை மூன்று மாதம் ஓய்வில் இருக்க வைத்து ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன. அவ்வாறு ஆய்வுக்கு உட்படுத்தப் படுபவர்களுக்கு ரூ. 11 லட்சம் சம்பளமாக தர நாசா முடிவு செய்துள்ளது.
விண்வெளி, அதிலுள்ள கோள்கள் குறித்து சர்வதேச அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கப் பட்டு அங்கு விண்வெளி வீரர்கள் தங்க வைக்கப் பட்டு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் கூட அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த மூன்று விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்த்ற்கு சென்றுள்ளனர். அவர்களில் இரண்டு விண்வெளி வீரர்கள் அங்கேயே ஓராண்டு தங்கி இருந்து ஆராய்ச்சிகள் செய்ய உள்ளனர்.
நாசா ஆய்வு...
விண்வெளியில் வீரர்களைத் தங்க வைக்கும் நாட்களை அதிகரிக்கச் செய்ய ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, தற்போது இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
நாசா விஞ்ஞானிகள்...
அதன்படி, விண்வெளியில் வீரர்களை அதிக நாட்கள் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் தங்க வைக்க என்னென்ன செய்ய வேண்டும் என விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்த ஆய்வுக்கு தகுதியான நபர்களை நாசா தேர்வு செய்ய உள்ளது.
சும்மாவே இருக்கணும்...
அவ்வாறு தேர்வு செய்யப் படும் நபர்களின் வேலை என்ன தெரியுமா ? 3 மாதங்களுக்கு எந்தவொரு வேலையும் செய்யாமல் பெட் ரெஸ்டில் இருக்க வேண்டும். அதாவது வடிவேலு பாணியில் சொன்னால் சும்மாவே இருக்க வேண்டும்.
ரூ. 11 லட்சம் சம்பளம்...
ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் தங்குவதற்கு தேவையான உடல்நிலை மாற்றங்கள் குறித்து இந்த ஆய்வு நடத்தப் படுகிறது. ஆனால், இந்த வேலைக்கு அவர்களுக்கு ரூ. 11 லட்சம் சம்பளம் நிர்ணயித்துள்ளது நாசா.
விண்வெளி வீரர்கள்...
சுமார் 70 மணி நேரம் படுத்த படுக்கையாக தலையைக் கூட அசைக்காமல் படுத்திருப்பவர்களின் உடல், விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் விண்வெளி வீரர்களின் உடல்நிலைக்கு ஒத்திருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.