கேரளாவில் பெய்த கோர மழை.. பேயாட்டத்தை அம்பலப்படுத்திய நாசா செயற்கைக் கோள் படங்கள்
வாஷிங்டன்: கேரளாவில் பேய் மழை பெய்ததை நாசா செயற்கைக்கோள் படங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. இவை கேரளம் மற்றும் கர்நாடகத்தில் வெள்ளம் எத்தகைய தீவிரமாகியிருந்தது என்பதை குறித்து காட்டுகின்றன.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளத்தை கேரளா சந்தித்தது. இதனால் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். 3.14 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். இயற்கை பேரிடர் அழிவு என்று கேரளத்தை மத்திய அரசு அறிவித்தது.
இந்தியா முழுவதும் கடந்த 13 முதல் 20-ஆம் தேதி வரை கனமழை பெய்ததாக இரு பேண்டுகள் காண்பிப்பதாக நாசா அறிக்கை வெளியிட்டுள்ளது.
பொதுவான மழை
நாசா வெளியிட்டுள்ள படத்தின் ஒரு பகுதியானது, மழை வடக்கு தீபகற்பம் வரை பரந்து விரிந்து வியாபித்திருந்ததை சுட்டிக் காட்டுகிறது. தீபகற்பத்தின் மேற்கு பாதி பகுதியிலிருந்து வங்க கடலின் கிழக்கு பாதி பகுதி வரை ஒரு வாரத்துக்கு 5 இன்ச்களிலிருந்து 14 இன்ச் அடர்த்தியிலான மழை பெய்துள்ளது. இது பொதுவான பருவமழைப் பொழிவு.
அதி தீவிரம்
அடுத்த பகுதியில் மழை எந்த அளவுக்கு அடர்த்தியாக, அதி தீவிரமாக இருந்தது என்பதை சுட்டிக் காட்டுகிறது. இந்தியாவின் தென்மேற்கு கடலோர பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் எந்த அளவுக்கு பலத்த மழை பெய்தது என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. இந்த மழையின் அடர்த்தியானது அதிகபட்சமாக 18.5 இன்ச்களாக இருந்தது.
கடலோர பகுதி
மேற்கு தொடர்ச்சி மலைகள் இமயமலைகளை காட்டிலும் சிறியதாக உள்ள போதிலும் அந்த மலைத்தொடரானது இந்திய மேற்கு கடலோர பகுதிக்கு இணையாக 2000 மீட்டருக்கு மேல் உள்ளது. இதன் காரணமாக இந்திய மேற்கு கடலோர பகுதியுடன் இணைந்து மேற்கு தொடர்ச்சி மலைகளும் நல்ல மழையை பெற்றன.
அரைமணிக்கு ஒரு தகவல்
ஏனெனில் தென்மேற்கு பருவமழை சுழற்சியின் ஒரு பகுதியாக வடக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் ஆகியவற்றிலிருந்து திரும்பி வரும் ஈரக்காற்றை மேற்கு தொடர்ச்சி மலைகள் மறித்து கொண்டன. இந்த தகவல்கள் ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கு ஒரு முறை எடுக்கப்பட்டது என்று நாசா தனது அறிக்கையில் கூறியுள்ளது.