4 கோடி மைல்களுக்கு அப்பால் இருந்து பார்த்தால் பூமி எப்படி இருக்கும் தெரியுமா?
விண்வெளியில் 40 மில்லியன் மைல்களுக்கு அப்பால் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
Recommended Video
வாஷிங்டன்: சுமார் 40 மில்லியன் மைல்களுக்கு அப்பால் இருந்து பார்த்தால் பூமி எப்படி இருக்கும் என்ற அற்புதமான புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவின் 'நாசா’ மையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. புதிய கோள்கள் கண்டுபிடிப்பு, செவ்வாய் கிரகம் உள்ளிட்டவைகளில் அது ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒருகட்டமாக கடந்த 2016ம் ஆண்டு 'அட்லஸ் 5 411’ என்ற ராக்கெட்டில் 'ஓசிரிஸ்-ரெஸ்’ எனப்படும் செயற்கைகோளை அது விண்ணில் ஏவியது.
எப்படி உருவாயின கிரகங்கள்
கிரகங்கள் உருவானது எப்படி என்பது குறித்து ஆராய இந்த செயற்கைக் கோள் அனுப்பப்பட்டுள்ளது. சூரியனை சுற்றி ஏராளமான குறுங்கோள்கள் சுற்றி வருகின்றன.
குறுங்கோளின் மண் மாதிரி
அவற்றில் பென்னு என்ற குறுங்கோளின் மண் மாதிரியை எடுத்து வந்து ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்தாண்டு பென்னு-வில் தரை இறங்கும் ஓசிரிஸ்-ரெஸ் செயற்கைகோள் அதன் மேற்பரப்பில் இருந்து 60 முதல் 2 ஆயிரம் கிராம் எடையுள்ள மண் மாதிரிகளை பூமிக்கு எடுத்துக் கொண்டு, வருகிற 2023-ம் ஆண்டு பூமிக்கு திரும்ப இருக்கிறது.
போட்டோ எடுத்த ஓசிரிஸ்
இந்நிலையில், ஓசிரிஸ் எடுத்த புதிய புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 17ம் தேதி எடுக்கப்பட்ட இப்புகைப்படத்தில் அடர் இருளில் பூமி வெளிச்சமான ஒரு புள்ளி போல் உள்ளது. அதன் அருகே சந்திரன் மற்றொரு சிறிய புள்ளியாக காட்சி அளிக்கிறது.
எவ்ளோ அழகா இருக்கு நம்ம பூமி
இந்தப் புகைப்படமானது சுமார் 39.5 மில்லியன் மைல்களுக்கு அப்பால் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. அதாவது 63.6 மில்லியன் கிலோ மீட்டர்களுக்கு அப்பால். மேலோட்டமாகப் பார்த்தால் இந்தப் புகைப்படத்தில் பூமியும், சந்திரனும் மட்டும் தான் தெரியும். ஆனால், நன்றாக உற்றுப் பார்த்தால் அதன் அருகே நட்சத்திரக் கூட்டங்கள் தெரியும் என நாசா விஞ்ஞானிகள் இந்தப் புகைப்படம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளனர்.