செவ்வாயில் ஒய்யாரமாய் தன்னைத் தானே ‘செல்ஃபி’ எடுத்துக் கொண்ட நாசாவின் கியூரியாசிட்டி!
வாஷிங்டன்: அமெரிக்காவால் அனுப்பப் பட்ட கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சிகள் சர்வதேச அளவில் நடத்தப்பட்டு வருகிறது. நமது பூமியை ஒத்திருக்கும் அக்கிரகத்தில் மனிதர்களைக் குடியேற்றுவது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா', செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை இறக்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் படங்களையும், தகவல்களையும் நாசாவுக்கு அனுப்பி வருகிறது.
செல்ஃபி...
இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் உள்ள மோஜோவி பகுதியில் உள்ள மவுண்ட் ஷார்ப் என்ற இடத்தில் நின்றபடி தன்னைத் தானே செல்ஃபி படம் எடுத்துள்ளது கியூரியாசிட்டி. இந்தப் பகுதியில் கியூரியாசிட்டி 5 மாதங்கள் ஆய்வில் ஈடுபட உள்ளது.
மவுண்ட் ஷார்ப் பகுதியில்...
‘மவுண்ட் ஷார்ப்' 3 மைல் உயரமானது. இதன் கீழ் பக்கவாட்டுப்பகுதி பல நூறு பாறை அடுக்குகளைக் கொண்டதாகும். செவ்வாய் கிரகத்தில் தான் நிற்பது போன்று பல செல்ஃபி படங்களை கியூரியாசிட்டி எடுத்து அனுப்பி உள்ளது.
மலைகளின் பின்னணியில்...
இது குறித்து கலிபோர்னியாவை சேர்ந்த ரோவர் குழு உறுப்பினர் ஜெட் புரபல்சன் ஆய்வகத்தை சேர்ந்த காத்ரின் ஸ்டேக் கூறும் போது, ‘கியூரியாசிட்டியின் முந்தைய படங்களுடன் தற்போதைய செல்ஃபி படங்களை ஒப்பிட்டோம். இந்த படங்களின் பல பிரேம்களை நாங்கள் இணைத்தோம். இப்போது மலைகளின் பின்னணியில் விண்கலத்தை பார்க்க முடிந்தது' என்றார்.
மண்மாதிரி சோதனை...
இப்போது மோஜோவி 2 என்ற இடத்தில் விண்கலம் 2-வது துளைபோடும் பணியை தொடங்கி உள்ளது. இந்த மண் மாதிரி எடுத்து பூமியில் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.