நாசாவின் 40 ஆண்டு கால செவ்வாய் பயணம்.. 2030ல் 'சுப முடிவு'க்கு ஆயத்தமாகிறது!
வாஷிங்டன்: 2025ம் ஆண்டு மனிதர்களை விண்கற்களுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டு வருகிறது. அதேபோல செவ்வாய் கிரகத்திற்கு 2030ம் ஆண்டு வாக்கில் மனிதர்களை அனுப்பவும் அது திட்டமிட்டுள்ளது. ஆனால் செவ்வாய் கிரகத்தை எட்டிப் பிடிக்க நாசா மேற்கொண்ட பயணம் நீண்டது நெடியது.
நமது கிரகத்திற்கு அப்பால் உள்ள உலகத்தை கண்டறிவதில் சாதாரண மனிதர்களுக்கே அதீத ஆர்வம் இருக்கும் நிலையில் விஞ்ஞானிகளுக்கு குறிப்பாக சகல வசதிகளையும், தொழில்நுட்பத்தையும் பெற்றுள்ள நாசாவுக்கு எப்படி இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
குறிப்பாக செவ்வாய் கிரகத்தை குறி வைத்து நாசா நகர்த்தி வரும் காய்கள் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் ஆர்வத்தையும் தூண்டி விட்டுள்ளன.
அருமையான இடம்...
உண்மையில் செவ்வாய் கிரகம் புதுப் புது அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான அருமையான இடமாக மாறியுள்ளது. மனிதர்களை வேறு ஒரு கிரகத்தில் குடியேற்ற சிறந்த தளமாகவும் அது மாறி வருகிறது.
நமது பிறப்பை உணர...
செவ்வாய் கிரகத்தின் தோற்றமும், அதன் வளர்ச்சியும், நமது பூமி எப்படியெல்லாம் உருவாகியிருக்கலாம், உருமாறியிருக்கலாம் என்பதை அறியவும் பயன்படுகிறது என்பதால்தான் செவ்வாய் மீதான ஈர்ப்பும் அதிகரித்துள்ளது.
மனிதர்கள் வாழ்ந்த பூமியா...
செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் அங்கு மனிதர்கள் வசிக்க முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.
40 வருட கால ஆய்வு...
செவ்வாயை ஆராய எத்தனையோ வழிகளை உலகம் கண்டுள்ளது. செயற்கைக் கோள்கள் மூலம் ஆராய்ந்தார்கள். தொலைநோக்கிகள் மூலம் ஆராய்ந்தார்கள். கடைசியாக லேன்டர்களை செவ்வாய் கிரகத்திலேயே இறக்கி ஆராய்ந்து விட்டனர் மனிதர்கள்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தொடங்கி...
உண்மையில் விண்வெளியில் அமைக்கப்பட்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்துதான் இந்த ஆராய்ச்சி தொடங்கியது.
பூமியைத் தாண்டிப் போக...
பூமியைத் தாண்டி நாம் போக வேண்டியிருந்தால் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும், என்ன மாதிரியான உபகரணங்கள் தேவைப்படும் என்பது முதல் பல சோதனைகளுக்கு நல்லதொரு ஆய்வகமாக இந்த சர்வதேச விண்வெளி நிலையம் அமைந்துள்ளது.
அடுத்து விண்வெளிக்கும் அப்பால்...
நாசாவின் அடுத்த ஆய்வு விண்வெளிக்கும் அப்பால் உள்ள விண்கற்களைக் குறி வைத்துள்ளது. அதாவது விண்கற்களில் போய் ராக்கெட்டில் இறங்கி ஆய்வு மேற்கொள்வதாகும் அது.
ஓரியான்...
2020ல் விண்கல்லில் போய் இறங்கத் திட்டமிட்டுள்ளது நாசா. மேலும் அங்கிருந்து விண்கல்லின் மாதிரியையும் எடுத்து வரவுள்ளனர். இதை வைத்து மனிதர்களை எப்படி செவ்வாய்க்கு அனுப்புவது என்ற ஒத்திகையையும் பார்க்கவுள்ளனர்.
2018 முதல் சோதனை...
இதற்காக 2018ம் ஆண்டு முதல் பல்வேறு சோதனைகளில் ஈடுபடவுள்ளது நாசா. புதிய சாத்தியக் கூறுகளையும் அது பரிசோதிக்கவுள்ளது.
ஓரியான் வென்றால்...
இந்த சோதனைகளில் ஓரியான் விண்கலம் ஈடுபடவுள்ளது. இதன் வெற்றியை வைத்தே செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியும் அமையும்.
சுற்றி வரும் ரோபோட்டிக் விண்கலங்கள்...
ஏற்கனவே செவ்வாயைச் சுற்றிலும் மற்றும் செவ்வாய் கிரகத்திலும் பல ரோபோட்டிக் விண்கலங்கள் சுற்றி வருகின்றன. இவை நமக்கு தேவையான பல தகவல்களை அனுப்பி வருகின்றன. இவையும் கூட நாம் செவ்வாயில் காலடி எடுத்து வைக்க உதவும்.
தீவிரமாக உழைக்கும் அமெரிக்கர்கள்...
மனிதர்களின் செவ்வாய் கனவை நனவாக்க நாசாவில் உள்ள விஞ்ஞானிகள் குழுவும், பொறியாளர்கள் குழுவும் இரவு பகலாக உழைத்து வருகிறது. பாதுகாப்பான முறையில் மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்புவது தொடர்பான ஆய்வுகளிலும் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.