செவ்வாயில் போய் "சேஃபாக" இறங்குவது எப்படி?... மாணவர்களிடம் ஐடியா கேட்கும் நாசா
வாஷிங்டன்: செவ்வாயில் அதிகளவு மனிதர்களைக் கொண்ட விண்கலங்களைப் பத்திரமாக தரையிறக்குவது எப்படி, அந்த விண்கலத்தை கிரகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நகர்த்திக் கொண்டுப் போவது எப்படி என்பது குறித்த யோசனைகளைச் சொல்லுமாறு மாணவர்களுக்கு நாசா அழைப்பு விடுத்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்களைக் குடியமர்த்துவது தொடர்பான ஆராய்ச்சிகள் சர்வதேச அளவில் நடந்து வருகின்றன. மனிதன் குடியேறுவதற்கான சாத்தியக்கூறுகள் செவ்வாய் கிரகத்தில் மட்டுமே காணப்படுகின்றன.
இதனால் அந்த கிரகம் குறித்து அமெரிக்காவின் நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ரஷ்ய விண்வெளி நிறுவனம் ஆகியவை தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
பனிக்கட்டி படிவங்கள்...
செவ்வாயில் நதிகள் ஓடியதற்கான தடயங்கள் உள்ளன. ஆனால் தற்போது அங்கு தண்ணீர் இல்லை. எனினும் செவ்வாயின் வடதுருவப் பகுதியில் நிலத்துக்கு அடியில் பனிக்கட்டி படிவங்கள் உறைந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மனிதர்களை அனுப்ப திட்டம்...
எனவே விரைவில் அங்கு மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 100 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
3டி வீடுகள்...
செவ்வாயில் மனிதன் குடியேறுவதற்கு ஏற்ற வீடுகளை 3டி வடிவில் உருவாக்கும் போட்டியை நாசா சமீபத்தில் நடத்தியது. இதில் மிகச் சிறந்த 30 மாதிரிகளை நாசா தேர்வு செய்து அண்மையில் வெளியிட்டது. இந்தப் போட்டியில் அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்பதால் வெளிநாட்டு அமைப்புகள் தங்கள் மாதிரிகளை சமர்ப்பிக்கவில்லை.
மாணவர்களுக்கு போட்டி...
இந்நிலையில், தற்போது மாணவர்களுக்கான புதிய போட்டியை அறிவித்துள்ளது நாசா. இதில் இளநிலை அல்லது முதுநிலை மாணவர்கள் மூன்று முதல் ஐந்து பேர் கொண்ட குழுவாக பங்கேற்கலாம். மாணவர்கள் தங்களது யோசனைகளை அனுப்ப கடைசித் தேதி நவம்பர் 15 என நாசா அறிவித்துள்ளது.
பரிசும் உண்டு...
இதில் தேர்வாகும் நான்கு குழுக்கள் தங்களது யோசனைகளை நாசா நடுவர்களிடம் அடுத்தாண்டு ஏப்ரலில் தங்களது திட்டமுடிவை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தேர்வாகும் ஒவ்வொரு குழுவிற்கும் 6 ஆயிரம் டாலர் ஆய்வு உதவித்தொகை வழங்கப்படும். இந்திய மதிப்பில் இது 3 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் ஆகும்.
ஹயாத்...
பத்திரமாக தரையிரங்கி பின்னர் நகருவது தொடர்பான இந்தத் தொழில்நுட்பத்திற்கு ஹைப்பர்சானிக் இன்பிளேட்டபிள் ஏரோடைனமிக் டிசெலரேட்டர் என்று நாசா பெயரிட்டுள்ளது. சுருக்கமாக ஹயாத்.
அதிக எடை விண்கலங்கள்...
இதன் மூலம் செவ்வாய் கிரகத்தின் தரைப் பரப்பில் 22 டன் எடைக்கும் மேல் கொண்ட விண்கலங்களை பத்திரமாக தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை எப்படி செயல்படுத்தலாம் என்பதைத்தான் மாணவர்கள் கூற வேண்டும்.
கியூரியாசிட்டி...
தற்போதைக்கு செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ள அதிக எடை கொண்ட விண்கலமாக கியூரியாசிட்டி விண்கலம்தான் திகழ்கிறது. அதன் எடை வெறும் ஒரு டன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.