நிஜமாகிறது “தி மார்ஷியன்” கதை- செவ்வாயில் உருளைக் கிழங்கு பயிரிட நாஸா முடிவு!
லிமா: சமீபத்தில் வெளிவந்த "தி மார்ஷியன்" திரைப்படக் காட்சி போலவே நிஜத்திலும் செவ்வாய் கிரகத்தில் உருளைக்கிழங்கு பயிரிட முடிவு செய்துள்ளது நாசா.
அமெரிக்காவின் நாஸா விண்வெளி மையம் அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா என்று ஆய்வு நடத்தி வருகிறது. மேலும் 2030 ஆம் ஆண்டில் அங்கு மனிதர்களை குடியமர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் உருளைக்கிழங்கு பயிரிட நாஸா முடிவு செய்துள்ளது. அதற்கான ஆய்வு பெருநாட்டின் தலைநகரமான லிமாவில் நடக்கிறது.
கூண்டில் சாகுபடி:
லிமாவில் உள்ள சர்வதேச உருளைக்கிழங்கு மையத்தின் உதவியுடன் அடுத்த மாதம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. செவ்வாய் கிரகத்தின் தட்ப வெப்ப நிலை மற்றும் சுற்றுச் சூழல் அமையும் விதத்தில் மிகப்பெரிய கூண்டு அமைத்து அதில் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது.
உண்மையாகும் தி மார்ஷியன்:
இந்த உருளைக்கிழங்கு பயிரிடும் திட்டம் ஏற்கனவே தி மார்ஷியன் என்னும் பெயரில் ஆண்ட்டி வெய்ர் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படத்தில் கடந்த வருடம் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது. திரைக்கதையை ட்ரூ கோடார்ட் எழுதியிருக்கிறார்.
பனிப்புயல் தாக்குதல்:
செவ்வாய் கிரகத்துக்கு ஆராய்ச்சிக்காகச் செல்கிறது ஒரு குழு. அந்தக் குழுவில் இடம்பெற்றிருக்கும் விண்வெளி வீரர் மார்க் வாட்னி. செவ்வாயில் இந்தக் குழு சென்று இறங்கிய பின்னர் கடும் பனிப் புயல் ஒன்று செவ்வாய் கிரகத்தை தாக்குகிறது.
உருளைக்கிழங்கு விவசாயம்:
இந்தப் பனிப் புயலில் மாட்டிக்கொண்ட மார்க் வாட்னி அதிலிருந்து மீள முடியாமல் சிக்கிக் கொள்கிறார். ஆனால் அவர் இறந்துவிட்டாரென எண்ணிய குழுவினர் அவரைக் விட்டுச் செல்கின்றனர். ஆனால் மார்க் வாட்னி இறக்கவில்லை. உயிருடன் இருக்கிறார். அங்கேயே கழிவுகளை வைத்து உருளைக்கிழங்கினைப் பயிரிட்டு உயிர் வாழ்வதாக உருவகப்படுத்தப்பட்டிருந்தது.
40 இடங்களில் பயிரிடப்படும்:
தற்போது அதனை உண்மையாக்கும் வகையில் இந்த அறிவிப்பினை நாஸா வெளியிட்டுள்ளது. 4500 ரகங்களில் செவ்வாய் கிரகத்தில் பயிரிடுவதற்காக 100 விதமான உருளைக் கிழங்கு வகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பயிரிடுவதற்காக லிமாவில் 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதியில் ஆன்டெஸ் மலைப் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.