ஓ காட்.. சூரியனில் பெரிய ஓட்டை இருக்காமே... பூமியைப் போல் 50 மடங்கு பெரிதான துளையாம்!
நியூயார்க்: பூமியின் அளவைப் போன்ற 50 மடங்கு பெரிதான துளை ஒன்று சூரியனில் இருப்பதை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கண்டுபிடித்துள்ளது.
விண்வெளி மற்றும் அதிலுள்ள கோள்கள் குறித்து சர்வதேச அளவில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி என்ற விண்கலத்தை விண்ணில் ஏவியுள்ளது. இது சூரியனைச் சுற்றி புகைப்படங்கள் எடுத்து அனுப்பி வருகிறது.
கடந்த 10ம் தேதி இந்த விண்கலமானது எடுத்து அனுப்பிய புகைப்படத்தில் சூரியனில் மிகப்பெரிய துளை உருவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. இது சூரியனின் வெளிப் பகுதிக்கும், காந்தப் புலத்திற்கும் நடுவே உள்ளது.
50 மடங்கு பெரியது...
இந்தத் துளையானது பூமியின் அளவைப் போல 50 மடங்கு பெரிதானது ஆகும். மேலும், இந்தத் துளையிலிருந்து புவியை நோக்கி அதிவேகமாக வெப்பக் காற்று வெளியேறி வருவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
கண்களால் காணமுடியாது...
சூரியனின் வெளி அடுக்கிலும், காந்தப் புலத்திலும் இந்தத் துளை காணப்படுவதாகவும், ஒளிவட்டத் துளையானது புற ஊதா அலைநீளத்தினால் நமது கண்களால் காணமுடியாத நிலை உள்ளதாகவும் நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இது தான் காரணம்...
பூமியைப் போல அல்லாமல், சூரியனானது வாயு மற்றும் பிளாஸ்மா எனப்படும் அயனிமப் பொருளால் சூழப்பட்டது. அவற்றுக்கு நிரந்தர உருவம் கிடையாது. எனவே வாயுவும், பிளாஸ்மாவும் உருமாறும்போது இத்தகைய துளைகள் ஏற்படும் என அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
காந்தப்புயல் பாதிப்பு...
மேலும், தற்போது சூரியனில் உருவாகியுள்ள இந்தத் துளையின் காரணமாக பூமியில் காந்தப் புயல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு ஏற்பட்டால் விண்வெளி ஆராய்ச்சிக்காக பூமியில் இருந்து அனுப்பப்படும் செயற்கைக்கோள்களை இயக்குவதில் சிக்கல் ஏற்படும்.
தொலைத் தொடர்புகள் பாதிப்பு...
அதேபோல் பூமியின் ரேடியோ அலைகளையும் காந்தப் புயல் பாதிக்கும். இதனால் ரேடியோ அலைகளின் வாயிலாக மேற்கொள்ளப்படும் தொலைத் தொடர்புகள் தடைபட வாய்ப்புள்ளது.
வெப்பநிலை அதிகரிக்கும் அபாயம்...
சூரியனில் ஏற்பட்டுள்ள இந்தப் பெரிய துளையானது வேறு திசைக்கு நகருவது தாமதமாகுமானால், புவியில் வெப்ப நிலை அதிகரிக்கும் அபாயமும் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.