பாக்-ல் நள்ளிரவில் திடீர் மின் தடை- நகரங்கள் இருளில் மூழ்கின..ஆட்சி கவிழ்ப்பா? என பரபர ட்வீட்டுகள்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நள்ளிரவில் திடீர் என ஏற்பட்ட மின்தடையால் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் விடிய விடிய இருளில் மூழ்கின. தொழில்நுட்ப கோளாறுகள் மட்டுமே இந்த மிகப் பெரிய திடீர் மின்தடைக்குக் காரணம் என்று பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது.
பாகிஸ்தானில் சனிக்கிழமை நள்ளிரவில் திடீரென மிகப் பெரிய மின்தடை ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி, லாகூர் உள்ளிட்டவை இருளில் மூழ்கின.
மின்தடை தொடர்பாக அந்த நாட்டு எரிசக்தித் துறை அமைச்சர் ஒமர் ஆயுப் இடைவிடாமல் ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை விடிய விடிய அப்டேட்டுகளை செய்து வந்தார். மேலும் நாட்டின் தேசியமின்விநியோக அமைப்பில் அதிர்வெண் திடீரென ஜீரோவுக்கு சென்றுதான் மின்தடைக்குக் காரணம்; தொழில்நுட்ப கோளாறு மட்டுமே மின்தடைக்குக் காரணம் எனவும் அவர் விளக்கம் அளித்து கொண்டே இருந்தார்.
இந்த மின்தடை சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கானது. பாகிஸ்தானில் 1999-ம் ஆண்டு நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்த போது மிகப் பெரிய மின்தடை ஏற்பட்டது. அப்போது பர்வேஷ் முசாரப் ராணுவப் புரட்சியில் ஈடுபட்டு ராணுவ ஆட்சியை அந்நாட்டில் அமல்படுத்தி இருந்தார். இதனை குறிப்பிட்டு பாகிஸ்தானியர்கள் ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர்.
மின்தடை நீங்கும்போது தற்போதைய பிரதமர் இம்ரான்கான் பதவியில் இருப்பாரா? என பாகிஸ்தானியர்கள் பலரும் கேள்வி எழுப்பி பதிவிட்டிருந்தனர். பாகிஸ்தான் மின்தடை குறித்த ட்விட்டர் பதிவுகள் இந்தியா, பாகிஸ்தானில் டிரெண்டிங்கானது.
அதிகாலை 4.19 மணியளவில் பாகிஸ்தான் எரிசக்தித்துறை அமைச்சர் ஒமர் ஆயுப், நகரங்களில் மின்விநியோகம் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.