பாரீஸ் மாநாடு: புவி வெப்பமயமாதலை 2 டிகிரிக்குக் கீழே குறைக்க உடன்பாடு: 196 நாடுகள் ஒப்புதல்
பாரீஸ்: 2 வார தீவிர பேச்சுவார்த்தைக்கு பிறகு பாரீஸ் நகரில் நடந்த பருவநிலை மாற்ற மாநாட்டில் புவி வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியசுக்கு கீழே குறைப்பது என்று எட்டப்பட்ட உடன்பாட்டை 196 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
உலகம் வெப்பயமாகி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்துவது குறித்து பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பருவநிலை மாற்ற மாநாடு நடந்து வந்தது. உலகம் வெப்பயமயமாதலை கட்டுப்படுத்துவது குறித்து 2 வார காலமாக நடந்த தீவிர பேச்சுவார்த்தையில் சுமார் 200 நாடுகள் கலந்து கொண்டன.
ஒரு நாடு ஒன்று கூறினால் மறு நாடு அதை ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தான் புவி வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியசுக்கு கீழே குறைப்பது என்ற உடன்பாடு சனிக்கிழமை எட்டப்பட்டது. இந்த உடன்பாட்டை பிரான்ஸின் வெளியுறவுத் துறை அமைச்சர் லாரன்ட் பேபியஸ் மாநாட்டில் அறிவித்தார்.
அவரது அறிவிப்பை கேட்ட பிற நாட்டு பிரதிநிதிகள் கைதட்டி ஆரவாரம் செய்து அதை வரவேற்றனர். மாநாட்டில் எட்டப்பட்டுள்ள உடன்பாட்டை இந்தியா உள்பட 196 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
இந்த உடன்பாடு வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பாராட்டியுள்ளார். அனைவரும் ஒன்றானால் என்ன நடக்கும் என்பதை நாம் உலகிற்கு காட்டியுள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் மிகச் சிறந்தது என்று நான் கூற மாட்டேன். ஆனால் நம் பூமியை பாதுகாக்க இது தான் சிறந்த வாய்ப்பு என்று ஒபாமா மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த உடன்பாடு சிறந்தது என்று கூற மாட்டோம். ஆனால் வரலாற்று சிறப்பு மிக்க பாதையில் செல்வதை இதை தடுக்காது என்று சீனாவின் பிரதிநிதி ஜீ ஜென்ஹுவா தெரிவித்துள்ளார்.
வரும் 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் தேதி நியூயார்க் நகரில் இந்த உடன்பாட்டில் அதிகாரப்பூர்வமாக நாடுகள் கையெழுத்திடும். உடன்பாட்டில் கையெழுத்திட வருமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் உலக தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.