ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் பொறுப்பிலிருந்து நவிபிள்ளை ஓய்வு
வாஷிங்டன்: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் பொறுப்பில் இருந்து இன்று (31ஆம் தேதி) ஓய்வு பெறுகிறார் நவநீதம்பிள்ளை.
கடந்த ஆறு ஆண்டுகளாக ஐ.நா மனித உரிமை ஆணையாளராகப் பதவி வகித்து வருகிறார் நவநீதம் பிள்ளை. இவரது தீவிர முயற்சியாலேயே இலங்கையில் நடைபெற்ற போர் குற்றம் தொடர்பாக, அந்நாடு மீது சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. உத்தரவிட்டது எனக் கூறலாம்.
மேலும், இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி இலங்கை சென்று நேரில் ஒருவார காலம் இவர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், இன்று தனது ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெறுகிறார் நவநீதம்பிள்ளை.
அரசு சார்பற்ற நிறுவனம்...
அதனைத் தொடர்ந்து சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்றின் தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணைக்குழு...
இதற்கிடையே, தான் ஓய்வு பெற்ற போதும் இலங்கைக்கு எதிராக போர் குற்ற விசாரணையை நடத்திவரும் குழு சிறப்பான முறையில் செயல்படும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் நவநீதம்பிள்ளை.
ஜோர்டான் நாட்டு இளவரசர்...
நவநீதம்பிள்ளை ஓய்வு பெறுவதையடுத்து, இப்பொறுப்பிற்கு ஏற்கனவே ஐ.நா. சார்பில் தேர்வாகியுள்ள ஜோர்டன் நாட்டின் இளவரசர் சையத் அல் ஹூசைன் நாளை (செப்டம்பர் 1ஆம் தேதி) முறைப்படி பொறுப்பேற்கிறார். சையத் அல் ஹூசைன் ஐ.நா.வுக்கான ஜோர்டன் நாட்டு தூதராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வருத்தம்...
இதற்கிடையே, நவநீதம்பிள்ளை ஓய்வுபெறுவதற்கு வருத்தம் தெரிவித்து, இலங்கையைச் சேர்ந்த பல அரசு சாரா நிறுவனங்கள் அவருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.