சிறையில் நவாஸ் ஷெரீப்புக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக அவரது மகன் பகீர் புகார்.. மோசமடைந்தது உடல் நிலை!
லாகூர்: சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் உடல் நிலை மோசமடைந்ததால் லாகூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது தந்தைக்கு சிறையில் விஷம் கொடுக்கப்பட்டதாக அவரது மகன் ஹூசைன் நவாஸ் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்தவர் நவாஸ் ஷெரீப். இவர் மீது உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 2017ம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் ஊழல் தொடர்பாக மூன்று வழக்கு போடப்பட்டது.
அதில் அல் அசீசியா ஸ்டீல் மில்ஸ் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து 69 வயதாகும் நவாஸ் ஷெரீப் சிறையில் அடைக்கப்பட்டார்
அவர்தான் முக்கியம்.. ஜஸ்டின் ட்ரூடோ நம்பி இருக்கும் இந்தியர்.. கனடாவின் கிங் மேக்கராக மாறும் சிங்!
மருத்துவமனையில் நவாஸ்
இந்நிலையில் சிறை தண்டனையை அனுபவித்து வந்த நவாஸ் ஷெரிப்பின் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவரை சிறையில் இருந்து, அக்டோபர் 21 ம் தேதி லாகூர் மருத்துவமனைக்கு சிறை அதிகாரிகள் அனுமதித்தனர். தற்போதும் தொடர்ந்து உடல்நிலை மோசமடைந்த நிலையில் தான் உள்ளது.
நவாஸ் மகன் புகார்
இது தொடர்பாக லண்டனில் இருக்கும் நவாஸ் ஷெரீப் மகன் ஹூசைன் ஷெரீப் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டை கிளப்பி உள்ளார்.
நவாஸ்க்கு விஷம்
அவர் தனது பதிவில் "என் அப்பாவின் ரத்த அணுக்களில் விஷம் கலந்ததால் அவரது உடல்நிலை மிகவும் மோசடைந்திருக்கிறது. இதன் காரணமாகவே அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிறையில் தான் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ரத்த அணுக்களின் எண்ணிக்கை 16,000 ஆக குறைந்து உடல்நிலை மிகவும் மோசமடையும் வரை என் அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்க்காதது ஏன் என இம்ரான் கான் அரசு பதிலளிக்க வேண்டும்" என கேள்வி எழுப்பி உள்ளார்.
மருத்துவக்குழு
இதனிடையே டாக்டர் அயாஸ் மஹ்மூத் தலைமையிலான மருத்துவக் குழு செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் ஷெரீப்பை பரிசோதித்து அவருக்கு இரத்த பிளேட்டுக்களை மாற்றியுள்ளது. .
உடல் நிலை மோசம்
அதன்பிறகு நவாஸ் ஷெரீப்பின் ரத்த அணுக்களின் எண்ணிக்கை 2000 லிருந்து 20,000 ஆக அதிகரித்துள்ளது எனவும், இருப்பினும் அவரது உடல்நிலை மோசமான நிலையிலேயே இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்திருப்பதாகவும், உடல்நிலை தேறும் வரை அவர் மருத்துவமனையிலேயே இருப்பார் என்றும் நவாஸ் ஷெரீப்பின் பிஎம்எல்-என் கட்சி தலைவர் அட்டாவுல்லா தாரார் தெரிவித்துள்ளார்.
ரத்த அணுக்கள்
மருத்துவர்களின் கூற்றுப்படி சாதாரணமாக ஒருவருக்கு உடலில் இரத்த அணுக்களின் ( இரத்த பிளேட்டுகள்) எண்ணிக்கை 150,000 முதல் 400,000 வரை இருக்க வேண்டும்.ஆனால் நவாஷ் ஷெரீப்புக்கு 20 ஆயிரம் என்ற அளவில் தான் இப்போது வரை உள்ளது. இந்நிலையில் நவாஸ் ஷெரீப் குறித்து அவரது பாதுகாப்பு உள்ள தேசிய பொறுப்புக்கூறல் பணியகம் (என்ஏபி), "நவாஸ் ஷெரீப்பின் உடல் நிலை இப்போது நிலையாக உள்ளது, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அவரது உடல்நிலை மேம்பட்டு வருகிறது." என தெரிவித்துள்ளது.