அழிந்து போன நியாண்டர்தால் மனிதர்களுக்கும் கொரோனா 'பாதிப்புக்கும்' தொடர்பு.. ஆய்வாளர்கள் ஆச்சரியம்
பெர்லின்: கொரோனா நோய் பாதித்த அனைவருக்குமே ஒரே மாதிரியான அறிகுறிகள் தென்படுவது கிடையாது. சிலருக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் மிகவும் அதிகமாகவும் ஒரு சிலருக்கு வந்து போனதே தெரியாமல் எளிதாக குணப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது அல்லவா.
Recommended Video
ஏன் இப்படி மனிதர்களுக்குள்.. அதுவும் ஒரே வயதை சார்ந்த குழுக்களுக்குள் இவ்வளவு வேறுபாடு ஏற்படுகிறது? இதற்கு காரணம், கொரோனா வைரஸ் வேறுபாட்டுடன் பரவியுள்ளதா, அல்லது வேறு காரணமா என்பது பற்றி உலகம் முழுக்கவும் பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இப்படித்தான், ஜெர்மனியை சேர்ந்த மேக்ஸ் பிளான்க் இன்ஸ்டியூட் பார் ரெவலூஸ்னரி அந்த்ரோபொலஜியைச் சேர்ந்த, விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அதில் ஒரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா கிளஸ்டர்.. தெற்கு ஆஸ்திரேலியாவில் போட்டாச்சு முழு லாக் டவுன்.. மக்கள் வெளியே வரக் கூடாது
நியாண்டர்தால்
நமக்கெல்லாம் நியாண்டர்தால் மனிதர்கள் பற்றி தெரிந்திருக்கும். இப்போது இருக்கக்கூடிய மனிதகுலத்துக்கு ஹோமோசேபியன்கள் என்று பெயர். ஆனால் இந்த மனித குலத்துக்கு முன்பே தோன்றி, பிறகு இந்த மனிதர்களுடன் வாழ்ந்தவர்கள்தான் நியாண்டர்தால் மனிதர்கள். ஹோமோசேபியன்கள் மனித குலத்தை போலவே நியாண்டர்தால் மனித குலமும் ஆப்பிரிக்காவில் இருந்து தோன்றியதாக கூறுவார்கள். பிறகு யுரேசியா பகுதிக்கு அவர்கள் இடம் பெயர்ந்தார்கள். யூரேசியா என்பது ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மத்திய கிழக்கு நாடுகளை உள்ளடக்கிய பிராந்தியம் ஆகும். அவர்கள் உடல் வலிமையை பெரிதும் நம்பி இருந்தவர்கள். மூளையை அதிகம் பயன்படுத்தி சிந்திப்பது கிடையாது. எனவே படிப்படியாக அந்த இனம் அழிந்து போயிற்று.
40,000 ஆண்டுகள் முன்பு அழிந்தது
சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பாக நியாண்டர்தால் இனம் முற்றிலும் அழிந்து போய்விட்டதாக ஆய்வுகள் முடிவு கட்டிவிட்டன. அந்த நியாண்டர்தால்களுக்கும், இப்போது பரவிவரும் கொரோனா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? என்ன தொடர்பு என்பது பற்றி 'நேச்சர்' என்ற மருத்துவ இதழில், நாம் மேலே குறிப்பிட்ட அந்த ஆய்வு அமைப்பு நடத்திய, ஆய்வு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் நியாண்டர்தால் மனிதர்களுடைய மரபணுக்களுடன், தற்கால மனிதர்கள் யாருக்கெல்லாம் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அவர்களுக்கெல்லாம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆசியாவில் அதிகம்
நியாண்டர்தால் மனிதர்களின் மரபணுவை சுமந்து செல்வதில் தெற்கு ஆசியா முதலிடத்தில் இருக்கிறது. தெற்கு ஆசியாவில் உள்ள, சுமார் 50 சதவீத மக்கள் கொரோனா நோய் பாதிப்பால் அதிகம் பாதிக்கப் படக்கூடிய மரபணுவை சுமந்து செல்பவர்களாக இருக்கிறார்கள். ஐரோப்பாவை சேர்ந்த 16% மக்கள் இதுபோன்ற மரபணு கொண்டவர்கள். 9 சதவீதம் அமெரிக்கர்கள் இதே போன்ற மரபணு கொண்டிருக்கிறார்கள். ஆசியாவிலும் வங்கதேசம் நாட்டில்தான் மிக அதிகமாக இதுபோன்ற மரபணு கொண்டவர்கள் இருக்கிறார்கள். அங்குள்ள மக்கள் தொகையில் 63% பேர் நியாண்டர்தால் ரிஸ்க் கொண்ட பட்டியலில் உள்ளனர்.
கிழக்கு ஆசியா தப்பியது
இதில் இன்னொரு தகவல் இருக்கிறது. தெற்கு ஆசியாவில் உள்ள நாடுகளில் இதுபோன்ற ரிஸ்க் அதிகம் இருந்த போதிலும் கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த பாதிப்பு அதிகம் கிடையாது. ஆனால் நோய் பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருப்பதற்கும் நோயால் உயிரிழப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்கும் தொடர்பு இருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் பதில்.
உயிரிழப்பு குறைவு
என்னதான், மூச்சுத் திணறல் உள்ளிட்ட கடுமையான பிரச்சினைகளில் சிக்கி இருந்தாலும், இறப்பு விகிதம் என்பது தெற்கு ஆசியாவில் குறைவாக இருக்கிறது. இந்தியா அதற்கு ஒரு உதாரணம். மொத்த இழப்பு எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் இருந்த போதிலும் இறப்பு விகிதம் என்பது குறைவாக இருக்கிறது. அதாவது பாதிக்கப்பட்ட நோயாளிகளில்.. இறந்துவிடுவோர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்கிறது ஆய்வுகள். இதற்கு ஒரு முக்கியமான காரணம் இந்தியா உள்ளிட்ட தெற்காசியாவில் இளைஞர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள்.
வயது மூப்பு காரணம்
ஆனால் கொரோனா நோய் பரவலால் அதிக உயிரிழப்புக்களை சந்தித்த ஐரோப்பிய நாடுகளில் இந்தியாவை விட 10 முதல் 20 வருடங்கள் சராசரி வயது அதிகம் உள்ள வயது முதிர்ந்த குடிமக்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆப்பிரிக்க நாடுகளில் நம்மை விடவும் இளைஞர்கள் அதிகம். எனவே இறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. ஆனால் நியாண்டர்தால் மரபணு தொடர்ச்சி காரணமாக, பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்று இந்த ஆய்வு கூறியுள்ளது. 40,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன ஒரு இனத்தின் மரபணு இன்னமும் மனிதர்களை ஆட்டிப் படைக்கிறது என்றால், நமது ஒவ்வொரு செயல்களும் இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்த உலகில்.. அல்லது இந்த பிரபஞ்சத்தில் எதிரொலிக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொண்டு பிரமித்துப் போகலாம்.