கரை ஒதுங்கிய 156 திமிங்கலங்கள்... 2011ம் ஆண்டை நினைத்து சுனாமி பீதியில் ஜப்பான் மக்கள்!
டோக்கியோ: ஜப்பான் நாட்டு கடற்கரையில் 156 திமிலங்கள் கரை ஒதுங்கியுள்ளதால், அந்நாட்டு மக்களுக்கு சுனாமி பயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு ஜப்பான் கடற்கரையில் இதேபோல், சுமார் 50 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. இது நடந்து ஆறு நாட்களுக்குப் பிறகு கடலுக்குள் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி பேரலை உருவானது. அதில் 19 ஆயிரம் மக்கள் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
2011ல் நிகழ்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கத்தால் புகுஷிமா அணு உலையில் கதிர்வீச்சு ஆபத்தும் ஏற்பட்டது.
மீண்டும் சுனாமி...?
இந்நிலையில், தற்போது ஜப்பான் நாட்டு கடற்கரையில் 156 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. எனவே, கடந்த 2011ம் ஆண்டு சுனாமியைப் போலவே தற்போதும் சுனாமி வரப்போகிறதோ என்ற அச்சத்தில் அந்நாட்டு மக்கள் உள்ளனர்.
ஆராய்ச்சி...
கரை ஒதுங்கிய திமிங்கலங்களைப் பார்வையிட்ட விஞ்ஞானிகள், ‘கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் அனைத்தும் புற்றுநோய் உள்ளிட்ட எவ்வித நோயாலும் பாதிக்கப்படவில்லை. எனவே திமிங்கலங்கள் உயிரிழக்க காரணம் என்ன என்பதை பற்றி ஆராய்ந்து வருகிறோம்' எனத் தெரிவித்துள்ளனர்.
பீதி...
மேலும், திமிங்கலம் கரை ஒதுங்கியதால் சுனாமி ஏற்படும் என யாரும் அச்சப்படத் தேவையில்லை என உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், சமூக வலைதளப் பக்கங்களிலோ அடுத்த பூகம்பம் வரப்போகிறது, தயாராக இருங்கள், வரும் 12ம் தேதி நாம் மிகப் பெரிய ஒன்றை சந்திக்க இருக்கிறோம் என்றும் சிலர் பீதியைக் கிளப்பி வருகிறார்கள்.
நியூசிலாந்தில்...
நியூசிலாந்து நாட்டில் கூட கடந்த 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 100 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின. அதற்கு அடுத்த 2 நாட்களில் அந்நாட்டின் 2வது மிகப்பெரிய நகரமான கிரைஸ்ட்சர்ச்சில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.