விடாமல் துரத்தும் கொரோனா.. 2 ஆண்டுகள் போராட்டம் வீண்.. இந்த நாட்டிற்கும் பரவிய கொரோனா பாதிப்பு
வெல்லிங்டன்: உலக நாடுகளை கொரோனா வைரஸ் அலறவிட்டு வரும் நிலையில், சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் இந்நாட்டில் முதல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019 இறுதியில் கண்டறியப்பட்ட கோவிட்-19 தான் உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா தொடங்கி ஆப்பிரிக்கா வரை அனைத்து நாடுகளும் கொரோனா வைரசால் மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொடர்ந்து அச்சுறுத்தி வந்த நிலையில், வேக்சின் பணிகள் தொடங்கப்பட்ட பிறகு தான் மெல்லக் குறைந்து வந்தது.
புயல் வலுவிழக்கும்... தென் மாவட்டங்களில் 5 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை
தி குக் தீவு
தீவிர கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் வேக்சின் பணிகள் மூலம் சில நாடுகள் மட்டும் வைரஸை தள்ளியே வைத்திருந்தன. அப்படி வைத்திருந்த நாடுகளில் ஒன்று தான் தி குக் தீவு. நியூசிலாந்து அருகே அமைந்துள்ள இந்த குட்டி தீவு நாட்டின் மொத்த மக்கள் தொகையே 17,000 ஆயிரம் தான். கொரோனா பரவ தொடங்கியதும் கடும் கட்டுப்பாடுகளை விதித்ததால் இங்கு வைரஸ் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
வேக்சின் பணிகள்
அதேபோல வேக்சின் கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே தடுப்பூசி பணிகளையும் இந்நாடு தீவிரமாக மேற்கொண்டது. மேலும், குறைந்த மக்கள்தொகை என்பதால் வெகு எளிதாக வேக்சின் செலுத்த முடிந்துள்ளது. அங்குள்ள 17,000 ஆயிரம் பேரில் சுமார் 96% சதவிகிதம் மக்களுக்கு சுமார் 2 டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
10 வயது சிறுவன்
இந்தச் சூழலில் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் வந்த 10 வயது சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து அந்த 10 வயது சிறுவன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குக் தீவுகளின் பிரதமர் மார்க் பிரவுன் தெரிவித்துள்ளார். அச்சிறுவன் நியூசிலாந்து நாட்டிலிருந்து வந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.
பிரதமர் மார்க் பிரவுன்
இது குறித்து பிரதமர் மார்க் பிரவுன் கூறுகையில், "எங்கள் வெளிநாட்டினருக்கு எல்லைகளை மீண்டும் திறக்க தயாராகி வருகிறோம். இந்த நேரத்தில் தான் 10 வயது சிறுவனுக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பை எல்லையிலேயே கண்டறிந்தது நாங்கள் எந்தளவுக்குத் தயாராக உள்ளோம் என்பதை உணர்த்துகிறது" என்றார்.
கொரோனா பெருந்தொற்று
கடந்த 2019 இறுதியில் கொரோனா பெருந்தொற்று பரவு தொடங்கியபோது, உலக நாடுகளிலிருந்து குக் தீவுகள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டது. கொரோனா கேஸ்கள் குறைந்ததைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 14 முதல், தனிமைப்படுத்தல் விதிகள் எதுவுமின்றி நியூசிலாந்து சென்றுவர அனுமதிக்கப்பட்டது. நியூசிலாந்து நாட்டில் திடீரென வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கவே பயோ பபுள் ரத்து செய்யப்பட்டது.