மதத்திலிருந்து தீவிரவாதத்தை தனிமைப்படுத்த வேண்டும்... பிரதமர் மோடி வலியுறுத்தல்
நியூயார்க் : ஐ.எஸ். போன்ற பயங்கரவாத இயக்கங்களால் சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில் தீவிரவாதத்தை முற்றிலுமாக மதத்திலிருந்து தனிமைப்படுத்த வேண்டியது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா. சபையின் 70 வது பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, ஜோர்டான் நாட்டு மன்னர் அப்துல்லாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இளைஞர்கள் தீவிரவாதத்தினுள் ஈர்க்கப்படுவதை தவிர்க்கும் வழிகள் குறித்து பேசப்பட்டதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.
தீவிரவாத எதிர்ப்புக்கு மன்னர் அப்துல்லா அளித்து வரும் ஆதரவுக்கு பாராட்டு தெரிவித்த மோடி, ஈராக் மற்றும் சிரியாவில் சிக்கித்தவித்த இந்தியர்களை பத்திரமாக தாய்நாட்டுக்கு அனுப்பி வைப்பதில் ஜோர்டான் அரசு செய்த உதவிக்கு நன்றி தெரிவித்தார்.
சர்வதேச சமுதாயத்துக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் திகழும் ஐ.எஸ். போன்ற அமைப்புகளை ஒழிக்க உதவி புரியுமாறு உலக நாடுகள் அனைத்தும் முன்வர வேண்டும் எனவும் மோடி கேட்டுக்கொண்டார்.