மண்டேலா உடல் நல்லடக்கம்... கண்ணீரோடு விடை கொடுத்த தென் ஆப்பிரிக்கா
ஜோகன்ஸ்பர்க்: மறைந்த தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உடல் இன்று அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப் பட்டது.
கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (95) கடந்த வாரம் மரணமடைந்தார். உலகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்காக அவரது உடல் கடந்த ஒரு வார காலமாக வைக்கப்பட்டிருந்தது. அன்னாரின் உடலுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை உலக நாடுகளின் தலைவர்கள் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து, ஏற்கனவே திட்டமிட்டப் படி இன்று அவரது உடல் அவரது சொந்த ஊரான குனுவிற்கு கொண்டு வரப்பட்டு, அன்னாரது உடல் நல்லடக்கம் செய்யப் பட்டது.
மண்டேலாவின் மறைவு...
தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலா நுரையீரல் கோளாறால் பாதிக்கப் பட்டிருந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், பின்னர் வீடு திரும்பினர். ஆயினும் கொஞ்சம் கொஞ்சமாக பேசும் சக்தியை இழந்த அவர், கடந்த 5ம் தேதி உயிரிழந்தார்.
நல்லடக்கம்...
மாபெரும் தலைவனான ஒடுக்கப் பட்டவர்களுக்காக போராடி தன் வாழ்நாளின் பெரும்பகுதியை சிறையில் கழித்த மண்டேலாவின் உடல் 15ம் தேதி, அதாவது இன்று அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்வதாகத் தீர்மானிக்கப் பட்டது.
தலைவர்கள் அஞ்சலி....
இடைப்பட்ட நாட்களில் மண்டேலாவின் உடலை உலகத் தலைவர்கள் மற்ரும் பொதுமக்கள நேரில் கண்டு அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதன்படி, கடந்த செவ்வாயன்று உலகத் தலைவர்கள் ஒன்று கூடி இரங்கல் செலுத்தினார்கள். இந்தியாவின் சார்பில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார்.
பிரியாவிடை....
அதன்பின்னர், அவரது உடல் தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள அரசு கட்டிடத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக 3 நாட்கள் வைக்கப்பட்டிருந்தது. கடந்த புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலான அந்த 3 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வரிசையில் நின்று தங்கள் நாட்டு தலைவனுக்கு பிரியா விடை கொடுத்தனர்.
வழியனுப்பு நிகழ்ச்சி...
பொது மக்களின் 3 நாள் அஞ்சலி முடிவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று காலை அவரது உடலுக்கு பிரிட்டோரி யாவில் உள்ள வாட்டர்லூப் விமானப்படை மைதானத்தில் வழியனுப்பு நிகழ்ச்சி நடந்தது.
அஞ்சலி வாசகங்கள்...
அந்த நிகழ்ச்சியில், புரட்சிகர பாடல்களும், அஞ்சலி வாசகங்களும் ஒலிக்கப்பட்டன. தென்னாப்பிரிக்க அதிபரும், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவருமான ஜேக்கப் ஜுமா இதில் கலந்து கொண்டு மண்டேலாவின் உடலை வழியனுப்பி வைத்தார்.
மண்டேலா நினைவுகள்...
மண்டேலாவின் வழியனுப்பும் நிகழ்வில் அவர் பேசும் போது, ‘நல்லபடியாக செல்லுங்கள், உங்கள் பங்கை நீங்கள் சிறப்பாக ஆற்றினீர்கள். நாங்கள் எப்போதும் உங்களை நினைவில் வைத்திருப்போம்' எனக் கூறி, வெள்ளையர்களின் ஆட்சியை எதிர்த்து விடுதலை போராட்ட வீரராக ஆயுத போராட்டம் தொடங்கியதில் இருந்து 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தது வரையிலான மண்டேலாவின் வாழ்க்கையை நினைவுபடுத்தி உரையாற்றினார்.
அணிவகுப்பு....
இறுதியாக கூடியிருந்த அனைவரும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் போராட்ட வாசகமான ‘அமண்ட லா' (சக்தி) என்று குரல் எழுப்பினார்கள். பின்னர் அவரது உடல் தென்னாப்பிரிக்க விமானப்படை விமானம் மூலம் கேப் மாகாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மண்டேலாவின் உடல் கொண்டு செல்லப் பட்ட விமானத்துக்கு முன் ஜெட் போர் விமானங்கள் அணிவகுத்து சென்றன.
இறுதி அஞ்சலி...
அங்கிருந்து 45 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மண்டேலாவின் சொந்த கிராமமான குனு என்ற பசுமை மலைகள் சூழ்ந்த கிராமத்திற்கு உடல் ராணுவ ஊர்வலமாக இன்று கொண்டு செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் அந்த பகுதி மக்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
இறுதிச் சடங்கு...
அதனைத் தொடர்ந்து கிராமத்தில் உள்ள மண்டேலாவின் இல்லத்தில் அவரது உடல் இன்று ராணுவ குண்டுகள் முழங்க, குடும்பத்தினரின் பாரம்பரிய சடங்குகளுடன் அடக்கம் செய்யப்பட்டது.
உலகத் தலைவர்கள்...
அன்னாரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், அமெரிக்க மக்கள் உரிமை இயக்கத்தை சேர்ந்த ஜெஸ்ஸி ஜாக்சன், ஆப்பிரிக்க, கரீபியன் தலைவர்கள், ஈரான் துணை அதிபர் முகம்மது ஷரியத்மதாரி, லெசோதோஸ் 3-ம் மன்னர் லெட்சி, பிரான்சின் முன்னாள் பிரதமர்கள் லியோனல் ஜோஸ்பின், ஆலைன் ஜுப்பெ உள்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.
கண்ணீர் அஞ்சலி....
மண்டேலாவின் உடல் கொண்டு செல்லப் பட்ட பாதையின் இருபக்கத்திலும் கூடி நின்றிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க தங்களது தலைவனுக்கு இறுதி மரியாதையை அளித்தனர்.
மண்டேலாவின் விருப்பம்...
சி.என்.என்க்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியில், மண்டேலாவின் மகள், ‘ தனது தந்தை அவரது சொந்தக் கிராமத்தை மிகவும் விரும்பியதாகவும், அவரது இறுதிக் காலத்தை அங்கு கழிக்க ஆசைப் பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.