இந்திய வம்சாவளி மாதேசி பிரச்சினையில் திடீர் திருப்பம்: அரசியலமைப்பில் திருத்தம் செய்ய நேபாளம் முடிவு
காத்மாண்டு: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாதேசிகள் நேபாளத்தில் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவர நேபாள அரசு முடிவு செய்துள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாதேசிகள் நேபாளத்தில் சிறுபான்மை இன மக்களாக உள்ளனர். இவர்கள் விகிதாச்சார பிரதிநிதித்துவம் வழங்கக் கோரியும், மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத்தில் தங்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்றும், இது குறித்து அரசியல் சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்திய நேபாள எல்லை பகுதியில் 50 நாட்களுக்கு மேலாக நடந்த போராட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், தொடரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர முக்கிய எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் மற்றும் மாதேசி சமுதாய ஆர்ப்பாட்ட குழுவினரும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
இந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு செய்தியார்களிடம் பேசிய அந்நாட்டு தொழில்துறை அமைச்சர் சோம் பிரசாத் பாண்டே, பிரதிநிதித்துவம் மற்றும் தொகுதி பங்கீடு ஆகிய இரண்டு பிரச்சினைகளிலும் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவரப்படும். இது தவிர குடியுரிமை அற்ற மக்களுக்கு குடியுரிமை வழங்குவது உட்பட மற்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.
இதனால் நீண்ட நாட்களாக நேபாளத்தில் தொடர்ந்து வந்த போராட்டங்களுக்கு உடனடியாக தீர்வு எட்டப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் நேபாள அரசின் இந்த முடிவை இந்தியா வரவேற்றுள்ளது