மாதேசிகள் போராட்டம் எதிரொலி... நேபாளத்தில் இந்திய டிவி சேனல்கள் முடக்கம்
காத்மாண்டு: நேபாளத்தில் மாதேசிகள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்குள்ள இந்திய டி.வி. சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என இந்தியா கூறி உள்ளது.
நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் புதிய அரசியல் சாசன சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அங்குள்ள மாதேசிகள் எனப்படும் இந்திய வம்சாவளி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. புதிய அரசியல் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் தொடந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இந்தியாவில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு செல்லும் லாரிகளை அவர்கள் நேபாளத்துக்குள் அனுமதிகாமல் எல்லையிலேயே தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் நேபாளத்தில் எரிபொருள் உள்பட அத்தியாவசியப்பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சீனாவிடம் இருந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களை நேபாளம் பெற்று வருகிறது.
மாதேசிகளின் போராட்டத்துக்கு இந்தியா துணை நிற்பதாகவும், இதன்மூலம் மறைமுகமான பொருளாதாரத் தடையை இந்தியா அறிவித்துள்ளதாகவும் நேபாளம் கருதுகிறது. இதனால் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களும் நேபாளத்தில் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அங்குள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், இந்திய டி.வி. சேனல்கள் அனைத்தையும் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி முடக்கி விட்டனர்.
இதனால் இந்திய வம்சாவளி மக்கள் தொலைக்காட்சி பார்க்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பிரச்னை குறித்து நேபாளத்துக்கான இந்திய தூதர் ரஞ்சித் ரே கூறும்போது,
நேபாளத்தில் நடைபெற்றுவரும் இந்த பிரச்சனை கவலை அளிப்பதாக உள்ளது. இது அரசியல் உள் நோக்கம் கொண்டதாகக் கருதப்படுவதால் இப்பிரச்சனைக்கு பேச்சு வார்த்தை மூலம் உடனடியாக தீர்வு காண வேண்டும். இதனை ஊக்குவிப்பது இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும் சம அளவில் கேடு விளைவிக்கும்.
இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து நேபாளத்தில் தவறான அபிப்பிராயம் உள்ளது. இதற்கு உடனடியாக தீர்வு காணாவிட்டால், அது கடும் விளைவுகளை ஏற்படுத்தி விடும். நேபாளம்- இந்தியாவிற்கு இடையேயான சுமூக உறவுக்கு இது மிகவும் முக்கியம் என்று அவர் கூறினார்.