நேபாள நிலநடுக்கம்: காணும் இடமெங்கும் கட்டிட குவியல்கள்… 5200 பேர் பலி
காணும் இடமெங்கும் கட்டிட இடுபாடுகள்... மண் மேடான மாடமாளிகைகள்... காதுகளில் ஒலிக்கும் அழுகுரல்கள்... முனகல்கள்.. என நேபாளத்தில் சனிக்கிழமையன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 5200 பேர்வரை உயிரிழந்து விட்டதாக கூறப்படும் நிலையில் நிலநடுக்கத்திற்கு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மண்மேடாகிப் போன கட்டிடங்கள்... கோவில்கள் என காத்மண்டுவில் கட்டிடங்களின் குவியல்களாவே இருக்கிறது. வெள்ளிக்கிழமை வரை பார்த்து ரசித்த, வணங்கிய இடங்கள் எல்லாம் இன்றைக்கு மண்ணாகி போனதே என்று நிலநடுக்கத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் தலையில் கைவைத்துக்கொண்டு கண்ணீர் விடுகின்றன.
உறவுகளை இழந்தவர்கள் ஒருபுறம் அழ... கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களின் கூக்குரல் ஆங்காங்கே ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. சத்தம் வரும் திசையை தேடி தேடி பாதுகாப்பாக இடிபாடுகளை அகற்றி பத்திரமாக மீட்கின்றனர் மீட்புக்குழுவினர்.
5200 பேர் பலி
மணல்குவியல்களை அகற்றும் போது அவர்களின் கண்களில் அதிகம் படுவது சடலங்கள்தான். அந்த சடலங்களைக் கூட பாதுகாப்பாக அகற்றுகின்றனர் மீட்புப்படையினர். இதுவரை 5200 பேர் வரை உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திறந்தவெளியில்
மக்கள் அனைவரும் வீடுகளை இழந்து வெட்டவெளியில் உறங்கும் நிலையில், மழை பெய்து அவர்களின் உறக்கத்தை கெடுக்கின்றது. அவர்களுக்கு தற்காலிக கூடாரங்கள்தான் தற்போதைய அத்தியாவசிய தேவையாக உள்ளது.
மருத்துவ சிகிக்சை
காயமடைந்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு இடவசதி இல்லாததால் திறந்த வெளியிலும், தற்காலிக கூடாரங்கள் அமைத்தும் மருத்துவ குழுவினர் போர்க்கால அடிப்படையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பூகம்பத்தால் படுகாயமடைந்த 8000 பேருக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சையும் சவாலானதாக உள்ளது.
பச்சிளம் குழந்தை
தகுதியுள்ளவை தப்பிப்பிழைக்கும் என்ற டார்வினின் பரிணாம கொள்கையின் படி மண் குவியலுக்கு இடையே சிக்கிய 4 மாத பச்சிளம் குழந்தை 22 மணிநேர போராட்டத்திற்குப் பின்னர் சின்னச் சின்ன காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. தரைமட்டமான வீட்டிற்கு கீழே சிக்கிய அந்த குழந்தையை காப்பாற்றிய அது எழுப்பிய அபய அழுகுரல்தான்.
எனக்கு மறு ஜென்மம்
நான் புது உலகத்துக்குள் நுழைந்திருப்பதாக உணர்கிறேன் என்று தான் உயிரோடு இருப்பதையே நம்ப முடியாமல் கூறுகிறார் சுனிதா சிதௌலா என்ற பெண். இவர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் தரைமட்டமான வீட்டில் சிக்கி 50 மணிநேரம் கழித்து மீட்கப்பட்டவர். நிலநடுக்கத்தில் உயிர் தப்பிய கணவர் மற்றும் அவரது இரண்டு மகன்களுடன் இப்போது மகிழ்ச்சியோடு இணைந்துள்ளார்.
உயிருடன் மீண்ட இளைஞர்
காத்மாண்டு நகரில் நடைபெற்ற மீட்பு பணியின் போது கட்டிட இடுபாடுக்குள் 80 மணி நேரம் மூன்று சடலங்களுடன் சிக்கி தவித்த 28 வயது இளைஞர் ரிஷிகானன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
ராணுவ வீரர்கள் மரணம்
மற்றொரு இடத்தில் இடிந்து கிடந்த கட்டிடம் ஒன்றில் சிக்கி இருந்தவர்களை நேபாள ராணுவ வீரர்கள் மீட்க முயன்ற போது இந்த கட்டிடம் முழுமையாக இடிந்து விழுந்தது. இதில் சிக்கி 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.