நேபாள நாட்டில் பாதிபேருக்கு கல்வியறிவில்லை.. மீட்பு தகவல்களுக்கு ரேடியோவே உற்ற துணை!
காத்மாண்டு: நேபாள நிலநடுக்கம் தொடர்பான மீட்பு பணிகளில் அங்குள்ள ரேடியோ ஸ்டேஷன்கள் பெருமளவுக்கு உதவிகரமாக இருந்துவருகின்றன.
உலகிலேயே நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் அதிக ஆபத்து நிறைந்த பகுதியில் 11வது இடத்திலுள்ள நாடு நேபாளம். இதுமட்டுமின்றி, இமயமலை சாரலில் அமைந்துள்ள நாடு என்பதால், அவ்வப்போது பெரிய மழை, பெரும் குளிர், பெரும் வெள்ளம் போன்ற ஆபத்துகளையும் சந்திக்க கூடியது அந்த நாடு.
எனவே அங்குள்ள பத்திரிகையாளர்களுக்கு, இயற்கை பேரழிவு ரிப்போர்ட்டிங்கிற்காக தனிப்பட்ட முறையில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இயற்கை பேரழிவு கவரேஜுக்கென்றே ஒவ்வொரு மீடியாவிலும் தனிப்பட்ட நிருபர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
இதில் முக்கியமான மீடியா, ரேடியோவாகும். ஏனெனில் நேபாள நாட்டில் 44 சதவீதம் பேர் எழுத படிக்க தெரியாதவர்கள். அவர்களின் தகவல் தொடர்பு சாதனம் ரேடியோதான். எனவேதான் குட்டி நாடாக இருந்தாலும், நேபாளத்தில் மொத்தம் 350 ரேடியோ ஸ்டேஷன்கள் உள்ளன. அதில் 36 ஸ்டேஷன்கள் தலைநகர் காத்மாண்டுவில் உள்ளன.
தற்போது இந்த ரேடியோ ஸ்டேஷன்கள்தான், மீட்பு பணி, எச்சரிக்கை உள்ளிட்ட விவரங்களை அளித்து வருகின்றன. ஆனால், இவற்றில் பல ஸ்டேஷன்கள், போதிய பாதுகாப்புடன் கட்டப்படவில்லை. எனவே எச்சரிக்கை அளிக்கும் ரேடியோ ஸ்டேஷன்களுக்கே ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது என்ற யோசனையில் அந்த நாட்டு அரசு ஆழ்ந்துள்ளது.