பீதியில் இரவெல்லாம் பிரார்த்தனை செய்து தெருவில் பொழுதை கழித்த நேபாள மக்கள்
காத்மாண்டு: நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து அங்குள்ள மக்கள் நேற்று இரவு தூங்காமல் தெருக்களில் வந்து பிரார்த்தனை செய்தும், பாடல்கள் பாடியும் பொழுதை கழித்துள்ளனர்.
நேபாளத்தில் சனிக்கிழமை காலை 11.56 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1, 896 ஆக அதிகரித்துள்ளது. நிலநடுக்கத்தால் நேபாளத்தில் உள்ள ஏராளமான கட்டிடங்கள், பிரபலமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளன.
நிலநடுக்கத்தை அடுத்து ஆப்டர்ஷாக் எனப்படும் நில அதிர்வு ஏற்படும் என்று அஞ்சிய நேபாள மக்கள் சனிக்கிழமை இரவை தெருக்களில் கழித்துள்ளனர். மக்கள் இரவு முழுவதும் பிரார்த்தனை செய்து கொண்டும், பாடல்கள் பாடிக் கொண்டும் இருந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை நேபாளத்தில் ஆப்டர்ஷாக் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியிருந்தது. பல்வேறு இடங்களில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் வெறுங்கையால் இடிபாடுகளை அகற்றி வருகின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 80 ஆண்டுகளில் நேபாளத்தில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.