நிலநடுக்கத்தில் சிக்கி சின்னாபின்னமான நேபாள பொருளாதாரம்... மீண்டு வர வருடங்கள் ஆகலாம்!
காத்மாண்டு: ஐயாயிரத்திற்கும் அதிகமான மக்களைக் கொன்று குவித்த நிலநடுக்கத்தால் நேபாளத்தின் பொருளாதாரமும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப நேபாள பொருளாதாரத்திற்கு பல ஆண்டுகள் பிடிக்கும் என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.
கடந்த சனிக்கிழமையன்று நேபாளத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், சுமார் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. இதனால், பலியானவர்களின் எண்ணிக்கையை அரிதியிட்டு கூற இயலவில்லை.
இந்த நிலநடுக்கத்தால் நேபாளத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடிழந்துள்ளனர். உலகநாடுகள் நேபாளத்திற்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
தரைமட்டமான சுற்றுலா வருமானம்...
மிகச்சிறந்த சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக இருந்து வருமானம் ஈட்டி வந்த நேபாளத்தின் நிலை நிலநடுக்கத்தால் அடியோடு மாறி விட்டது. பல்வேறு பாரம்பரியக் கட்டிடங்கள் தற்போது அங்கு தரை மட்டமாகி விட்டன. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகை வரும் ஆண்டுகளில் குறைவாகவே இருக்கும். இதேபோல், படப்பிடிப்புகளும் உடனடியாக நடைபெற வாய்ப்பில்லை.
கேன்சலான டிக்கெட்டுகள்...
நிலநடுக்க பயம் காரணமாக நேபாளத்திற்கு சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்கள் அனைவரும் தங்களது டிக்கெட்டை கேன்சல் செய்து விட்டார்களாம். இதுவரை புதிதாக யாரும் டிக்கெட் பதிவு செய்யவில்லை என காத்மாண்டுவில் டிராவல் கம்பெனி நடத்தி வரும் ஹரிமன் லாமா கவலையுடன் தெரிவிக்கிறார்.
8 லட்சம் மக்கள்...
கடந்தாண்டு மட்டும் சுமார் 8 லட்சம் மக்கள் நேபாளத்திற்கு வந்து சென்றுள்ளனர். ஆனால், இந்தாண்டின் துவக்கத்திலேயே நிலநடுக்கம் ஏற்பட்டு விட்டதால் இனி சுற்றுலாப் பயணிகள் வர வாய்ப்பு குறைவு எனத் தெரிகிறது.
பாதுகாப்பான இடத்திற்கு பயணம்...
தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் முடிந்தவரை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவே மக்கள் விரும்புகிறார்களாம். மேலும் போதிய குடிநீர், உணவு வசதிகளின்றி, நோய்த்தொற்றும் அபாயமும் இருப்பதால் புதிதாக நேபாளத்திற்கு வர யாருக்கும் விருப்பமில்லை என லாமா கூறுகிறார்.
நேபாள பொருளாதாரம்...
ராஜீவ் பிஸ்வாஸ் என்பவர் கூறுகையில் நிலைமை மிக மோசமாக உள்ளது. சுற்றுலா முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதை நம்பித்தான் நேபாள பொருளாதாரமே உள்ளது. அதிலிருந்து நேபாளம் எப்போது மீளும் என்பதே தெரியவில்லை.
மறுசீரமைப்புக்கு...
மறு சீரமைப்புக்கு மட்டும் 5 பில்லியன் டாலர் தேவைப்படும். அதாவது நேபாள பொருளாதாரத்தின் 20 சதவீதம் மறு சீரமைப்புப் பணிகளுக்குத் தேவை. அது மிகப் பெரிய தொகையாகும். சேத மதிப்பு மட்டும் 10 பில்லியன் டாலராக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
7% சுற்றுலா வருமானம்...
நேபாள வேலைவாய்ப்புகளில் 7 சதவீதம் சுற்றுலா மூலமே கிடைக்கிறது. மேலும் நேபாள பொருளாதாரத்தில் சுற்றுலாவின் பங்கு 8 சதவீதமாகும்.
எவரெஸ்ட் சிகரம்...
உலகின் 14 உயரமான மலைச் சிகரங்களில் 8 சிகரங்கள் நேபாளத்தில்தான் உள்ளன. அதில் முக்கியமானது எவரெஸ்ட் சிகரம். இது உலகிலேயே மிகவும் உயரமான சிகரமாகும். ஆனால் யுனெஸ்கோவால் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட பல இந்த நிலநடுக்கத்தில் அழிந்து போய் விட்டன.
வருவாய் சரிவு...
சுற்றுலா வந்தவர்கள் தற்போது நேபாளத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள். அங்குள்ள மக்களின் நிலையும் மோசமாக உள்ளது. இனி சுற்றுலாப் பயணிகளும் இப்போதைக்கு வரும் வாய்ப்பில்லை. இதனால், சுற்றுலா மூலம் வரும் வருவாய் மிகப் பெரிய சரிவைக் காணவுள்ளது. நேபாளத்தை முழுமையாக மறு சீரமைத்த பின்னரே நிலைமை சீரடையும் என்பது உறுதி. அதற்கு பல்வேறு வழிகளிலிருந்தும் உதவிக் கரங்கள் நீள வேண்டியது முக்கியமானது.