ராமர் ஒரு நேபாளி- பிரதமர் ஷர்மா ஒளி கருத்தில் அரசியல் உள்நோக்கம் இல்லை- நேபாள வெளியுறவு அமைச்சகம்
காத்மாண்டு: ராமர் பிறந்த உண்மையான அயோத்தி நேபாளத்தில்தான் இருக்கிறது; ராமர் ஒரு நேபாளி என நேபாள பிரதமர் ஷர்மா ஒளி (ஒலி) பேசிய கருத்தில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்திருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடம் குறித்த நீண்டகால வழக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் முடிவுக்கு வந்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேபாள பிரதமர் ஷர்மா ஒளி, ராமர் பிறந்த அயோத்தி, நேபாளத்தில்தான் இருக்கிறது. ராமர் ஒரு நேபாளி என கூறியிருந்தார். ஷர்மா ஒளியின் இந்த கருத்து மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது.
ஏற்கனவே இந்திய நிலப்பகுதிகளை நேபாளத்துக்கு சொந்தம் கொண்டாடி இருநாடுகளிடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியவர் ஷர்மா ஒளி. இதனாலேயே அவரது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ராமர் குறித்த ஷர்மா ஒளியின் கருத்துக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
மோசமாகும் நிலை.. 24 மணி நேரத்தில் 28179 கொரோனா கேஸ்கள்.. இந்தியாவில் 10 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு
இதனையடுத்து நேபாள வெளியுறவுத்துற அமைச்சகம் ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ராமர் குறித்த பிரதமர் ஷர்மா ஒளியின் கருத்தில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் அவர் கருத்துகளைத் தெரிவிக்கவில்லை.
இந்தியாவில் உள்ள அயோத்தியின் கலாசார மாண்பை சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்த கருத்து வெளியிடப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.