பள்ளி பாடப்புத்தகம்.. நாணயம்.. அடுத்தடுத்து இந்தியாவுக்கு எதிராக திரும்பிய நேபாளம்.. பரபரப்பு
காத்மாண்டு: உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோராகரில் உள்ள இந்திய நிலப்பரப்பை தன்னுடையது என சொந்தம் கொண்டாடி வரும் நேபாளம், அதற்கான புதிய அரசியல் வரைபடத்தை அனுமதிக்கும் திருத்தத்தை மூன்று மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றி இருந்தது. இப்போது அந்த வரைபடத்தை நேபாளம் அதன் கல்வி பாடத்திட்டத்திலும் நாணயத்திலும் சேர்த்துள்ளது.
நேபாள கல்வி அமைச்சர் கிரிராஜ் மணி போகரேலின் அலுவலகம் இதை பிரபல ஆங்கில ஊடகத்திடம் உறுதிப்படுத்தி உள்ளது. இது தொடப்ராக கூறுகையில், நேபாளத்தின் புவியியல் மற்றும் பிராந்திய எல்லை ('நேபல்கோ பூபாக் ரா சீமசம்பந்தி ஸ்வாத்யே சமகிரி) ' மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.முன்னுரையை பொகரேல் எழுதியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தில் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கலபானியை நேபாள பிரதேசமாக சர்ச்சைக்குரிய வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேபாளத்தின் புவியியல் பரப்பளவு 1,47,641.28 சதுர கி.மீ ஆகும். கலாபனி என்பது 460 சதுர கி.மீ நிலப்பரப்பு ஆகும்.
லடாக் மோதலில் எங்கள் வீரர்கள் கொல்லப்பட்டது உண்மை- எண்ணிக்கை குறைவு- சீனா அரசு ஊடகம் ஒப்புதல்!
புதிய வரைபடத்துடன் நாணயம்
பாடத்திட்டதில் வரைபடம் சேர்க்கப்பட்ட அதே நாளில், அதை நாணயத்திலும் வெளியிட கே பி ஓலி தலைமையிலான நேபாள அமைச்சரவை முடிவு செய்துள்ளது அந்நாட்டின் மத்திய வங்கியான நேபாள ராஸ்ட்ரா வங்கிக்கும் புதிய அரசியல் வரைபடத்துடன் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் பிரிவுகளின் புதிய நாணயங்களை புதிதாக வழங்க நேபாள அரசு அனுமதி அளித்தது.
தசராவில் அறிமுகம்
இதை நேபாள அரசு செய்தித் தொடர்பாளரும் வெளியுறவு அமைச்சருமான பிரதீப் கியாவாலி உறுதி செய்யதாக அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய நாணயங்கள் நேபாளத்தில் மிகப் பெரிய திருவிழாவாக கொண்டாடப்படும் தசரா (தஷைன் என்று அங்கு அழைக்கப்படுகிறது ) பண்டிகையின் போது புழக்கத்திற்கு வர உள்ளதாம்.
ராஜ்நாத் திறந்த சாலை
கடந்த ஆண்டு நவம்பரில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரகாண்டின் பித்தோராகரில் மிக முக்கியமான லிபுலேக் சாலையைத் திறந்தார். இதற்கு நேபாளம் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. அத்துடன் லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் கலபானி ஆகிய மூன்று பகுதிகளை தங்கள் நாட்டிற்கு சொந்தம் என்று நேபாளம் சர்ச்சையை கிளப்பியது. அத்துடன் நேபாள நாடாளுமன்றம் புதிய வரைபடத்திற்கு ஒருமனதாக வாக்களித்தது. அதன்பின்னர் நாட்டின் வரைபட மாற்றம் நாட்டின் அனைத்து ஆவணங்களிலும் பயன்படுத்தப்படும் என்று அரசாங்கம் அப்போது அறிவித்திருந்தது.
நாணயத்தில் அறிமுகம்
எனவே அதன்படி தான் பள்ளி புத்தகங்கள் மற்றும் நாணயங்களில் புதிய நேபாள வரைபடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. "முழுமையாக சட்டபூர்வமானது" என்றும் வழக்கமான நடவடிக்கைகளே பின்பற்றப்படுவதாகவும் "நேபாள தூதரகங்களுக்கு புதிய வரைபடங்களை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது என்றும் நேபாள அரசு வட்டாரங்கள் தெரிவித்தன
தவறான புரிதல்கள்
இதற்கிடையில், நேபாளத்தின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த திரிபுவன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் மற்றும் இராஜதந்திரத் துறையின் தலைவர் கட்கா கே.சி,. புதிய வரைபடம் குறித்து தீர்மானத்தின் தேவை நாளுக்கு நாள் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையே தவறான புரிதல்கள் உள்ளன. அப்படிப்பட்ட சூழலில் பதிய வரைபடத்தை நேபாளம் அறிமுகம் செய்துள்ளது. இது இந்த நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட முடிவு.. ஆனால் இந்த பிரச்சினைகள் உரையாடலின் மூலம் தீர்க்கப்பட வேண்டும், அதற்கான தீர்வு காணப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்." என்றார்.