இந்தியாவை வைரஸ் என்று விமர்சித்த நேபாள பிரதமர்.. ஆளுங்கட்சி வச்ச ஆப்பு.. பறிபோகும் பதவி
காத்மாண்டு: நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி தனது பதவியை காப்பாற்றிக் கொள்வதற்கான இறுதிக் கட்டப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். எந்த நேரத்திலும் இவரது ஆட்சி கவிழலாம்.
பிரதமர் ஒலிக்கு நேபாளத்தில் அரசியல் நெருக்கடிகள் முற்றி இருக்கும் நிலையில் இன்று காத்மாண்டுவில் இருக்கும் கங்காலால் தேசிய இருதய மையத்தில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்குத்தான் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவரது செய்தி ஆலோசகர் சூர்யா ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். மருத்துவமனையில் இருந்து வந்த பின்னர் மக்களிடம் பேசுவார் என்று கூறப்படுகிறது.
பிரதமர் பதவியில் இருந்து தன்னை நீக்குவதற்கு இந்தியா மறைமுகமாக வேலை செய்கிறது என்று பிரதமர் ஒலி கடந்த ஞாயிற்றுக் கிழமை குற்றம்சாட்டி இருந்தார். இதையடுத்து. இவருக்கு எதிராக ஆளும் நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்கள் கொடி பிடித்துள்ளனர்.
வேறவழியே இல்லை- நேபாள பிரதமர் ஷர்மா ஒலி இன்று பதவியை ராஜினாமா செய்கிறார்?
பிரதமருக்கு நெருக்கடி
பதவியை ராஜினாமா செய்யுமாறு ஒலிக்கு ஆளும் கட்சி தலைவர்கள் கடந்த செவ்வாய் கிழமை நெருக்கடி கொடுத்து இருந்தனர். அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஒலிக்கு கட்சியினர் அழைப்பு விடுத்து இருந்தனர். ஆனால், அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து, பல்வேறு விஷயங்களில் தோல்வி அடைந்த பிரதமர் ஒலி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று நேபாளம் கம்யூனிஸ்ட் காட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான புஷ்ப கமல் தஹல், மாதவ் நேபாள், ஜலந்த கனல், பாம்தேவ் கவுதம் ஆகியோர் வலியுறுத்தி இருந்தனர்.
ஆளுங் கட்சிக்கு ஆபத்து
இந்த நிலையில் தற்போது நடந்து கொண்டு இருக்கும் நாடளுமன்றக் கூட்டத்தை ஒத்தி வைக்குமாறு அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு பரிந்துரை செய்தனர். நாடாளுமன்றத்தை தள்ளி வைக்க அதிபர் பண்டாரி அனுமதி அளித்துவிட்டால், நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து ஒலி தப்பித்துக் கொள்ளலாம். நம்பிக்கை வாக்கெடுப்பு மட்டுமில்லை. ஆளும் நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சியை உடைப்பதற்கும் ஒலிக்கு போதிய அவகாசம் கிடைத்துவிடும்.
புஷ்பகமல் தஹலுக்கு ஆதரவு
கட்சியின் நிலைக்குழு கமிட்டியில் இருக்கும் 44 உறுப்பினர்களும் கட்சித் தலைவராக இருக்கும் புஷ்ப கமல் தஹலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இறுதியாக நடந்த நிலைக்குழு கமிட்டிக் கூட்டத்தில் 44 உறுப்பினர்களில் 31 உறுப்பினர்கள் ஒலிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் பிரதமராக ஒலி நீடிக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். லிபுலேக் எல்லைப் பிரச்னைக்கு முன்பே நேபாளத்தில் கொரோனாவுக்கு எதிராக போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும், பொருளாதார சிக்கல்களுக்காகவும் சொந்தக் கட்சியே அவரை ராஜினாமா செய்யுமாறு கோரிக்கை வைத்து வந்தது. இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிராக ஒலி பேசி வந்ததும் கூடுதலாக அமைந்து விட்டது.
நேபாள வரைபடம்
இந்தியப் பகுதிகளான காலாபானி, லிபுலேக், லிம்பியதுரா ஆகியப் பகுதிகளை தங்களது பகுதிகளுடன் இணைந்து நேபாளம் சமீபத்தில் வரைபடம் வெளியிட்டு அதை நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றியது. இந்த வரைபடத்தை நிறைவேற்ற ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை வறுபுறுத்தி நிறைவேற்றினார் ஒலி. நிறைவேற்றிய வேகத்தில் அவருக்கு அழுத்தமும், நெருக்கடியும் எழுந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்புச் சட்டம் நேபாளத்தில் கொண்டு வந்தபோது, எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் பிரதமராக இருந்த சுஷில் கொய்ராலாவை ராஜினாமா செய்ய வைத்து அந்த இடத்திற்கு ஒலி வந்தார். இவரது அரசியல் போக்கே இந்தியாவுக்கு எதிரானதுதான். இதைப் பயன்படுத்தி அரசியல் அமைப்புச் சட்டத்தை விமர்சித்து ஆட்சியைப் பிடித்தார்.
பதவி காலி
ஆனால், இவரால் ஆட்சியில் நீடிக்க முடியவில்லை. 2016ல் பதவியில் இருந்து இறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எதிர்க்கட்சிகள் இவருக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர். அந்த சமயத்தில் மாதேஷி, தாரு மற்றும் சிறுபான்மையின மக்கள் புதிய அரசியலமைப்பு சட்டத்தில் தங்களுக்கு ஆதரவானதாக இல்லை என்று எதிர்ப்பு தெரிவித்தனர். பதவியை இழந்த ஒலி, இந்தியாவுக்கு எதிரான குரலை எழுப்பினார். இந்தியாவுடனான எல்லையை சீனா மூடியது. தனது பதவி இழப்புக்கும், நேபாளத்தில் நடக்கும் பிரச்சனைக்கும் இந்தியாதான் காரணம் என்று ஒலி கூறி வந்தார்.
எப்படி பிரதமரானார்
இதையடுத்து, 2018ல் மாவோயிஸ்ட் கட்சிக்கு தலைமை வகித்து வந்த புஷ்ப கமல் தனது கட்சியை நேபாள கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைத்தார். கட்சிக்கு புஷ்ப கமல் தலைமை வகித்தார். தேர்தலில் வெற்றி பெற்ற ஒலி பிரதமரானார். தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியாவுக்கு எதிரான குரலை எழுப்பினார். இவரது எதிர்ப்பு நேபாளத்தில் எரிவாயுப் பொருட்கள், அன்றாட அத்தியாவசியப் பொருட்கள், மருந்துக்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்தது. இந்தப் பொருட்களுக்கு இந்தியாவை நேபாளம் நம்பியிருந்தது.
சீனாவின் களவாணித்தனம்
ஆட்சிக்கு வந்த பின்னர் முழுவதும் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு, சீனாவுடன் ஒலி கைகோர்த்தார். இதனால், சீனாவில் இருந்து நிதி குவிந்தது. சாலை அமைக்க சீனா உதவியது. நேபாளத்திற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் பயணமும் மேற்கொண்டு இருந்தார். இந்தியாவுக்கு எதிரான, சீனாவுக்கு ஆதரவான நடவடிக்கைகளால் மீண்டும் ஒலிக்கு சிக்கல் எழுந்துள்ளது. சீன வைரஸை விட இந்திய வைரஸ் மோசமானது என்று ஒலி விமர்சித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.