நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்க நேபாள அதிபர் ஒப்புதல்.. தற்காலிகமாக தப்பினார் பிரதமர் ஒலி!!
காத்மாண்டு: நேபாள நாட்டின் நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்க அந்த நாட்டு அதிபர் பித்யா தேவி பண்டாரி ஒப்புதல் அளித்துள்ளார். இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து பிரதமர் கேபி சர்மா ஒலி தற்காலிகமாக தப்பித்துள்ளார்.
நேபாளம் நாட்டை நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அந்த நாட்டின் பிரதமராக கேபி சர்மா ஒலி இருந்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில், நடப்பு நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தை ரத்து செய்யுமாறு அதிபருக்கு அமைச்சரவைக் கூட்டம் பரிந்துரை செய்து இருந்தது. இதற்கு முன்னதாக அதிபர் பண்டாரியை இரண்டு முறை பிரதமர் ஒலி சந்தித்து இருந்தார்.
பிரதமர் பதவியில் இருந்து தன்னை நீக்குவதற்கு இந்தியா மறைமுக வேலைகளில் ஈடுபட்டு வருகிறது என்று பிரதமர் ஒலி கடந்த ஞாயிற்றுக் கிழமை குற்றம்சாட்டி இருந்தார். எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் எப்படி இந்தியா மீது குற்றம்சாட்டலாம் என்று நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒலி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான புஷ்ப கமல் தஹல், மாதவ் நேபாள், ஜலந்த கனல், பாம்தேவ் கவுதம் ஆகியோர் வலியுறுத்தி இருந்தனர்.
இந்தியாவை வைரஸ் என்று விமர்சித்த நேபாள பிரதமர்.. ஆளுங்கட்சி வச்ச ஆப்பு.. பறிபோகும் பதவி
நிலைக்குழுவின் எதிர்ப்பு
கட்சியின் நிலைக்குழு கமிட்டியில் இருக்கும் 44 உறுப்பினர்களும் கட்சித் தலைவராக இருக்கும் புஷ்ப கமல் தஹலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இறுதியாக நடந்த நிலைக்குழு கமிட்டிக் கூட்டத்தில் 44 உறுப்பினர்களில் 31 உறுப்பினர்கள் ஒலிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் பிரதமராக ஒலி நீடிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கூட்டம் முடித்து வைப்பு
இந்த நிலையில் தற்போது நடந்து கொண்டு இருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தை ஒத்தி வைக்குமாறு அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு அமைச்சரவை பரிந்துரை செய்தது. இதை அதிபர் பண்டாரி ஏற்று ஒப்புதல் வழங்கியுள்ளார். நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க அதிபர் ஒப்புதல் வழங்கி இருப்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஒலிக்கு இல்லை. கட்சிக்குள் சிக்கல் எழுந்தாலும், உறுப்பினர்களைப் பிரித்து அவரால் தனிக்கட்சி துவக்குவதற்கு ஏதுவாக, சிறப்பு சட்டத்தை கொண்டு வந்து அமல்படுத்த முடியும்.
வரைபடத்தால் பிரச்சினை
இந்தியப் பகுதிகளான காலாபானி, லிபுலேக், லிம்பியதுரா ஆகியப் பகுதிகளை தங்களது பகுதிகளுடன் இணைந்து நேபாளம் சமீபத்தில் வரைபடம் வெளியிட்டு அதை நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றியது. இந்த வரைபடத்தை நிறைவேற்ற ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை வறுபுறுத்தி நிறைவேற்றினார் ஒலி. நிறைவேற்றிய வேகத்தில் அவருக்கு அழுத்தமும், நெருக்கடியும் எழுந்துள்ளது.
2018 முதல் ஒலி
இதையடுத்து, 2018ல் மாவோயிஸ்ட் கட்சிக்கு தலைமை வகித்து வந்த புஷ்ப கமல் தனது கட்சியை நேபாள கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைத்தார். கட்சிக்கு புஷ்ப கமல் தலைமை வகித்தார். தேர்தலில் வெற்றி பெற்ற ஒலி பிரதமரானார். தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியாவுக்கு எதிரான குரலை எழுப்பினார். இவரது எதிர்ப்பு நேபாளத்தில் எரிவாயுப் பொருட்கள், அன்றாட அத்தியாவசியப் பொருட்கள், மருந்துக்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்தது. இந்தப் பொருட்களுக்கு இந்தியாவை நேபாளம் நம்பியிருந்தது.
சீனாவால் வந்த வினை
ஆட்சிக்கு வந்த பின்னர் முழுவதும் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு, சீனாவுடன் ஒலி கைகோர்த்தார். இதனால், சீனாவில் இருந்து நிதி குவிந்தது. சாலை அமைக்க சீனா உதவியது. நேபாளத்திற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் பயணமும் மேற்கொண்டு இருந்தார். இந்தியாவுக்கு எதிரான, சீனாவுக்கு ஆதரவான நடவடிக்கைகளால் மீண்டும் ஒலிக்கு சிக்கல் எழுந்துள்ளது.